Friday, December 4, 2015

உரியவிலை கிடைக்கும்வரை விளைபொருட்களை இருப்பு வைக்கும் வசதி

திண்டுக்கல், : உரிய விலை கிடைக்கும் வரை விளைபொருட்களை வேளாண் விற்பனைக்கூட சேமிப்பு கிட்டங்கிகள் மற்றும் குளிர்பதன கிடங்குகளில் விவசாயிகள் இருப்பு வைத்துக்கொள்ளலாம் என்று வேளாண்வணிக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட வேளாண் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, கோபால்பட்டி, நத்தம் மற்றம் வத்தலக்குண்டு ஆகிய இடங்களில் விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இங்கு 11 ஆயிரத்து 800 டன் விளைபொருட்களை சேமிக்கலாம்.

கடந்த ஆண்டில் 16 ஆயிரத்து 459 டன் விளைபொருட்களை விவசாயிகள், வியாபாரிகள் இருப்பு வைத்து பயன்பெற்றுள்ளனர். விளைபொருட்களின் இருப்பிற்கேற்ப அதன் மதிப்பில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் கடனாக வழங்கப்படும்.இருப்பு வைத்துள்ள விளைபொருட்களை வாங்கும் வியாபாரிகளும் விளைபொருட்களை இங்கேயே இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

இதேபோல் பழநி ஆயக்குடியில் கொய்யா மற்றும் பழங்கள் உற்பத்தியாளர்கள் கம்பெனியும், ஒட்டன்சத்திரத்தில் முருங்கை மற்றும் காய்கறிகள் உற்பத்தியாளர்கள் கம்பெனியும் அமைக்கப்பட்டு கம்பெனி சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்சமயம் மாவட்டத்தில் சீரான மழை பெய்திருப்பதால் விவசாயப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 

இப்பயிர் வரும் ஜனவரி, பிப்ரவரியில் அறுவடைக்கு வரும். அப்போது இந்த சேமிப்புக்கிட்டங்கி மற்றும் குளிர்பதன கிட்டங்கிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக கிராமங்களில் அறுவடை பின்செய்நேர்த்தி, தரம்பிரித்தல், தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி மேற்காணும் வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் விவசாயிகளிடம் தெரிவித்துள்ளனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment