Monday, August 1, 2016

வயல்களில் பூச்சிநோய்களை ஒழிக்கும் முறை

 வயல்களில் பூச்சிநோய்களை ஒழிக்கும் முறை குறித்து பழநி வேளாண் உதவி இயக்குநர் சுருளியப்பன் விளக்கமளித்துள்ளார். 
வயல் பூச்சி நோய்கள் ஏற்படாமல் இருக்க வயல் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் சுமார் 3ல் 1 பங்கு உயரத்தில் தட்டைப்பயிறு விதைக்க வேண்டும். இந்த தட்டைப்பயிரில் நெற்பயிரைத் தாக்காத அசுவினி உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறிவண்டுகள் கவரப்படும். பொறிவண்டுகள் நெற்பயிரைத் தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளை தாக்கி அவற்றை உண்டு கட்டுபடுத்தும். 1 ஹெக்டேருக்கு 3 கிலோ தட்டைப்பயிறு விதை தேவைப்படும். வரப்புகளை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும். வடிகால் வசதிகளை சரிசெய்து தேவையான அளவு மட்டுமே நீர் கட்ட வேண்டும். தேவைக்கு அதிகமாக நீர் கட்டும்போது பூச்சிநோய் தாக்குதல் அதிகமாகும் என்பதால் தேவைக்கு ஏற்ப நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

 2 சதுரமீட்டருக்கு 1 குருத்து பூச்சியினுடைய முட்டைக்குவியல் காணப்பட்டால், டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கும் முட்டை ஒட்டுண்ணிகள் 1 ஹெக்டேருக்கு 5 சிசி வீதம் விட வேண்டும். பூச்சிகளை கட்டுப்டுத்தக்கூடிய ஊன் விழுங்கிகளான நயாட்ஸ் எனும் தட்டான்பூச்சிகளின் இளம் பருவ பூச்சிகளை வயலில் சிறுதொட்டிகள் அல்லது குட்டைகளில் தண்ணீர் தேக்கி வைப்பதன் மூலம் இனம் பெருக செய்யலாம். தட்டான்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் நேரத்தில் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கக்கூடாது.  

புகையான் பூச்சிகளை கட்டுபடுத்தக் கூடிய மைரிட் எனும் விழுங்கிகள் இல்லாத வயல்களில் அவற்றை கொண்டுவந்து விட வேண்டும். நெல் வயல்களில் நீர் தொடர்ந்து தேங்கி நிற்கும் இடங்களில் மீன்வளர்ப்பதால் பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுகிறது. கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தக்கூடிய பிவேரியா மற்றும் மெட்டாரைசியம் போன்ற பூஞ்சாளங்களை உபயோகிக்கலாம். விளக்குப்பொறிகளை அமைத்தும் நோய்ப்பூச்சிகளை அழிக்கலாம். விவசாயிகள் இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ, வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அணுகலாமென பழநி வட்டார வேளாண் உதவி இயக்குநர் சுருளியப்பன் தெரிவித்துள்ளார். 

Source : Dinakaran

No comments:

Post a Comment