Wednesday, August 3, 2016

மண் வளம் காக்க பசுந்தாள் உரமிட வேண்டும்: வேளாண் அதிகாரி அறிவுரை

மண்ணின் வளத்தை பாதுகாக்கவும், மகசூலை அதிகரிக்கவும் பசுந்தாள் உரத்தை பயன்படுத்த வேண்டும் என்று விழுப்புரம் வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வேளாண் துறை மூலம் 40 ஏக்கர் அளவில் பசுந்தாள் உரம் (தக்கை பூண்டு) சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
 இப்பயிர்களை, விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார். அப்போது, அவர் விவசாயிகளிடம் கூறியது:
 விவசாயிகள் ரசாயன உரங்கள் அதிகம் பயன்படுத்துவதால் மண்ணின் கார, அமில தன்மைகள் மாறுகின்றன. மேலும், நிலத்தில் உப்பின் அளவு அதிகரிக்கிறது.
 தொடர்ந்து சாகுபடி செய்தல் மற்றும் ரசாயன உரங்களை பயன்படுத்துவதால் மண்ணின் தன்மை மாறி அங்ககசத்துகள் குறைந்து மண் வளமற்றதாகிவிடுகிறது.
 ஆகையால், மண் வளத்தினை அதிகரித்திட விவசாயிகள் சம்பா சாகுபடிக்கு நாற்றங்கால் விடும் முன்னர், தக்கைப்பூண்டு பயிரிடலாம். இதற்காக ஏக்கருக்கு 20 முதல் 25 கிலோ விதைகளை விதைக்கலாம். 
 தக்கைப்பூண்டு களிமண் பகுதிக்கு ஏற்றது. மணல் பகுதிகளுக்கு சணப்பை ஏற்றது. 30 முதல் 35 நாள்களில் பூக்கும் தருணத்தில், இதனை மடக்கி உழுதால் ஏக்கருக்கு சுமார் 20-25 டன்கள் வரை தழைகள் கிடைக்கிறது.
 ஆண்டுக்கு ஒருமுறை பசுந்தாள் உரம் சாகுபடி செய்தால் மண்ணின் வளம் கூடி மகசூல் அதிகரிக்கிறது. ரசாயன உரங்களின் செலவு குறைகிறது என்றார்.
 அரசு பசுந்தாள் உரப்பயிர்களை ஊக்குவித்திட, விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1,500 மானியம் வழங்குகிறது. விவசாயிகள் பெருமளவு இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றார்.
 வேளாண் அலுவலர்கள் செந்தில், கங்காகௌரி மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment