Wednesday, August 3, 2016

தோட்டக்கலை பயிர் மானிய திட்டத்தில் சேர வேண்டுமா? விண்ணப்ப முகாமில் பெயரை பதிவு செய்ய அழைப்பு

தோட்டக்கலை பயிர்மானிய திட்டத்தில் சேர்ந்து பயன்பெற, நாளை மறுநாள் இளையான்குடி வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நடைபெறும், விண்ணப்ப  முகாமில் பெயரை பதிவு செய்ய, விவசாயிகளுக்கு இளையான்குடி தோட்டக்கலைத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இளையான்குடி வட்டார விவசாயிகளுக்கு, தோட்டக்கலை பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் நோக்கத்தில் பல மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 அதனடிப்படையில் 2016-17ம் ஆண்டிற்காண தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டம், மானாவாரி பயிர் மேம்பாட்டுத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் பிரதான் மந்திரி நீர்பாசன திட்டம் ஆகியவை தோட்டக்கலைத்துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.இவற்றில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் காய்கறி நாற்றுகள் (கத்தரி, மிளகாய்) மா, பப்பாளி நாற்றுகள், நிலப்போர்வை, பறவை தடுப்பு வேலிகள், தேனி பெட்டிகள் மற்றும் பண்ணை இயந்திரங்களும் வழங்கப்பட உள்ளன.

 மானாவாரி பயிர் மேம்பாடு திட்டத்தின்கீழ் மா (பக்க ஒட்டு) நாற்றுகளும், மற்றும் பிரதான் மந்திரி நீர்பாசன திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்துடனும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்துடனும் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்து தரப்படுகிறது.
மேலும் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விளக்குப்பொறி, இனகவர்சிப் பொறியும் மற்றும் மஞ்சள் நிற பொறிகளும், கை தெளிப்பான் ஆகியவை மானியத்துடன் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட திட்டங்களில் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு தனி இட ஒதுக்கீடும், சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.
தோட்டக்கலை பயிர்களுக்கு மானியத்துடன் சலுகைகளைப் பெற ஆர்வமுள்ள இளையான்குடி வட்டார விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவணம், ரேஷன்கார்டு நகல், ஆதார் கார்டு நகல், வங்கி பாஸ்புக் நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் இளையான்குடி வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் நாளை மறுநாள் (ஆக.5) நடைபெறும் விண்ணப்ப முகாமில் விவசாயிகள் தங்களது பெயரை முன்பதிவு செய்யலாம் என இளையான்குடி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்(பொ) கண்ணன் தெரிவித்துள்ளார். 

Source : Dinakaran

No comments:

Post a Comment