Tuesday, August 16, 2016

உரங்களின் விலைகள் குறைப்பு வேளாண் அதிகாரி தகவல்

விவசாயிகள் பயனடையும் வகையில் உரங்களின் விலையை அரசு அதிரடியாக குறைத்துள்ளது என திண்டுக்கல் வேளாண் இணை இயக்குனர் தங்கசாமி தெரிவித்தார்.
அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் பயிர்களுக்கு யூரியா, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., போன்ற உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. யூரியா 3380 டன், டி.ஏ.பி., 1229 டன், பொட்டாஷ் 1785 டன், காம்ப்ளக்ஸ் 2302 டன் என மொத்தம் 9072 டன் உரங்கள் தனியார் மற்றும் கூட்டுறவு மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உரங்களின் விலையை அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளதால், 50 கிலோ டி.ஏ.பி. உரம் ரூ.85, காம்ப்ளக்ஸ் வகைகள் ரூ.50, பொட்டாஷ் ரூ.250 ம் விலை குறைக்கப்பட்டுள்ளது.
சில்லறை விற்பனை மையங்களில் 50 கிலோ மூடை டி.ஏ.பி., ரூ.1100, பொட்டாஷ் ரூ.550, பாக்டம்பாஸ் ரூ.850, ஸ்பிக் காம்ப்ளக்ஸ் ரூ.875, மங்களா காம்ப்ளக்ஸ் ரூ.865, ஐ.பி.எல். காம்ப்ளக்ஸ் ரூ.850 க்கும் விற்பனை செய்ய விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போல், கூட்டுறவு சங்கங்களில் இப்கோ காம்ப்ளக்ஸ் மூடை ரூ.825, 10:26:26 காம்ப்ளக்ஸ் ரூ.1030, கிரிப்போ காம்ப்ளக்ஸ் ரூ.825 க்கும் விற்க உத்தரவிட்டுள்ளது.
உர விற்பனை மையங்களில் விவசாயிகள் விலையை அறியும் வகையில் தரக்கட்டுபாடு அலுவலர்களின்
விவரம் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிட்ட பலகை வைக்க வேண்டும். துண்டு பிரசுரம், சுவரொட்டிகள் மூலம் உரங்களின் புதிய விலையை விவசாயிகள் அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அரசு அறிவித்த விலைக்கு உரம் விற்பனை செய்யாத உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுபாடு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தரக்கட்டுபாடு உதவி இயக்குனர் ரவிசந்திரன் உடன் இருந்தார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment