Monday, August 1, 2016

புற்றுநோய் வராமல் தடுக்கும் கேரட்



அல்சரை குணப்படுத்த கூடியதும், பார்வை திறனை அதிகரிக்கவல்லதும், புற்றுநோய் வராமல் தடுக்க கூடிய தன்மை கொண்டதுமான கேரட்டின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அன்றாடம் ஒரு கேரட் சாப்பிட்டு வருவது நல்லது. பல்வேறு சத்துக்களை கொண்ட கேரட் கேன்சரை தடுக்கவல்லது. இதில், மருத்துவ வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. கேரட்டை பயன்படுத்தி பார்வை திறனை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம்.

கேரட்டை சுத்தப்படுத்தி, அதன் தோலை சீவிவிட்டு நீர் அதிகம் சேர்க்காமல் சாறு எடுக்கவும். 50 மில்லி கேரட் சாறுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து குடிக்கவும். பார்வை கோளாறு உள்ளவர்கள் கண்களை பலப்படுத்த இந்த சாறை குடித்துவந்தால் கண் நரம்புகள் பலப்படும். கண் பார்வை தெளிவாக இருக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். கேரட்டில் உள்ள கெரோட்டின் என்ற வேதிப்பொருள் கண், தோல், எலும்புகளுக்கு பலம் தருகிறது. கேரட்டை பயன்படுத்தி வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். முட்டைகோசை நீர்விடாமல் அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் கேரட் சாறு சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வயிறு உப்புசம் சரியாகும். அல்சர் குணமாகும்.

கேரட் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. நச்சுக்களை வெளியேற்றி கேன்சர் வராமல் தடுக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கேரட்டை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கேரட் சாறு கொடுக்கும்போது ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் பச்சை வாடை இல்லாமல் இருக்கும். குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். கேரட்டை பயன்படுத்தி அல்சருக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேரட், பனங்கற்கண்டு, பால், தேங்காய் பால்.

பனங்கற்கண்டை நீர்விட்டு கரைத்து வடிகட்டி எடுக்கவும். இதனுடன் சிறிது காய்ச்சிய பால், கேரட் சாறு, 2 ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். காலையில் சாப்பிட்ட பின்னர் இதை குடித்துவர அல்சர் குணமாகும். புற்றுநோய் வராமல் தடுக்கும். கேரட்டை பயன்படுத்தி சிராய்ப்பு காயத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேங்காய் எண்ணெய்யுடன், கேரட் பசையை சேர்த்து தைல பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி சிராய்ப்பு, தீ காயங்கள் மீது போடும்போது காயங்கள் சீக்கிரம் குணமாகும். சிராய்பு காயங்கள் ஏற்பட்டால் கேரட்டை அரைத்து லேசாக ஒத்தடம் கொடுத்தால் எரிச்சல் குணமாகும்.

கண்ணில் ஏற்படும் சிவப்பு தன்மை, கண் எரிச்சலுக்கான மருத்துவத்தை காணலாம். இடது கண் சிவந்திருந்தால், வலது கால் கட்டை விரலின் நகத்தில் சுண்ணாம்பை தடவி வைத்தால் கண் சிவப்பு மாறும். இதேபோல், வலது கண் சிவப்பாக இருந்தால் இடது கால் கட்டை விரல் நகத்தில் சுண்ணாம்பு பூசினால் சிவப்பு தன்மை மாறும்.

Source : Dinakaran

No comments:

Post a Comment