Thursday, August 18, 2016

சொட்டுநீர் பாசனத்துக்கு 100 % மானியம்


மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்ய 100 % மானியம் வழங்கப்படுவதாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், இந்தாண்டிற்கான (2016 - 17) வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளின் பயிர் உற்பத்தி மற்றும் நீர் மேலாண்மையை அதிகரிக்க, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்துக்கு 4,061 ஏக்கருக்கு, ரூ. 27.98 கோடியும், வேளாண் துறைக்கு 1,359 ஏக்கருக்கு ரூ. 9.32 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக நுண்ணீர் பாசனத்தின் மூலம் விவசாய பாசன நீர் தேவையினை, 4 பங்கிலிருந்து, ஒரு பங்கு அளவாக குறைக்க முடியும்.
மேலும், தேவையான இடத்தில் மட்டும் நீர் பாய்ச்சப்படுவதால் பயிருக்கு முழுமையான நீர் கிடைப்பதோடு, நீரில் கரையும் உரங்களையும் பயிரின் வேர்களுக்கே சீராக கொடுக்க முடியும் என்பதால், உரத் தேவையும் குறையும். அதிக லாபமும் பெறலாம்.
இத்திட்டங்கள் குறித்து, விவசாயிகள் தங்கள் பகுதி தோட்டக்கலை மற்றும் வேளாண் உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு (2.5 ஏக்கர் வரை) 100 % மானியமும், இதர விவசாயிகளுக்கு (5 ஏக்கருக்கு மேல்) 75 % மானியமும் வழங்கப்படும்.
சொட்டு நீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள், தங்கள் நிலத்துக்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை அறிக்கை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலர்களை அணுகி, பயன்பெறுமாறு மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பொ.மணிமொழி தெரிவித்துள்ளார்.
 Source : Dinamani

No comments:

Post a Comment