Monday, August 1, 2016

தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் செம்பருத்தி



உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதும், தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் தன்மை கொண்டதுமான செம்பருத்தியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். அதிக வெப்பத்தால் சிறுநீர் கோளாறு, தலைமுடி கொட்டுதல், கொப்புளங்கள் உள்ளிட்டவை  ஏற்படும். வியர்வையால் தொல்லை ஏற்படும். வெயிலால் தலைக்கு வரும் பிரச்னைகளை சரிசெய்வது அவசியம். செம்பருத்தி பூவை பசையாக அரைக்கவும்.

குளிப்பதற்கு முன்பு தலையில் நன்றாக தடவி, 15 நிமிடங்களுக்கு பின் குளிக்கவும். வியர்வை, மாசு போன்றவற்றால் தலையில் ஏற்படும் பொடுகு, கொப்புளங்கள் சரியாகும். முடி கொட்டுவது நிற்கும். கண்கள் குளிர்ச்சி அடையும். தலைமுடி ஆரோக்கியம் பெறும். மென்மையாக பட்டுப்போல முடி இருக்கும்.  செம்பருத்தி பூ பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். செம்பருத்தியில் பல்வேறு நன்மைகள் உள்ளன.  உடலுக்கு குளிர்ச்சி தரும். நுண்கிருமிகள் அழிக்கும். எண்ணெய் பசையை போக்க கூடியது.

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தால் மூலம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அகத்தி கீரை, நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய். அகத்தி கீரையை பசையாக அரைத்து கொள்ளவும். 2 ஸ்பூன் பசையுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை தலைக்கு போட்டு குளிப்பதால் அழுக்குகள் வெளியேறும். உடல் குளிர்ச்சி அடையும். கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் குணமாகும். இது அதிகம் குளிர்ச்சி தரக்கூடியதால் மாதம் ஒருமுறை 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளிப்பது நல்லது.

வாரம் ஒருமுறை பயன்படுத்தும் குளியல் தைலம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: வெந்தயம், சீரகம், பச்சரிசி, எலுமிச்சை, நல்லெண்ணெய். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்வதற்கு முன்பு எலுமிச்சை சாறு சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் சீரகம், வெந்தயம், பச்சரிசி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்ச வேண்டும்.

இதை தலையில் தேய்த்து குளிப்பதால் வெயிலால் ஏற்படும் மயக்க நிலை, தலையில் அரிப்பு, முடி கொட்டுதல், கண்கள் சிவந்துபோவது போன்றவை சரியாகும். உடல் குளிர்ச்சி பெறும். அருகம்புல் சாறுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து தலைகுளித்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கலாம். மாதுளை, வாழைப்பழம், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு ஆகியவை குளிர்ச்சிக்காக சாப்பிடுவோம். இதன் தோல்களை காயவைத்து பொடியாக்கி சீயக்காய், பாசிபயறு சேர்த்து அரைத்து வைத்து கொண்டு குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
Source : Dinakaran

No comments:

Post a Comment