Wednesday, August 3, 2016

சந்தோஷம் பொங்க வைக்கும் சம்பங்கி விவசாயம்


t

கரும்பு, நெல், வாழை அல்லது காய்கறிகள் பயிரிட்டு தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை. சம்பங்கிப்பூ சாகுபடியில் சத்தமின்றி சாதிக்கலாம் என்கிறார், திண்டுக்கல் தவசிமடையைச் சேர்ந்த விவசாயி வாசுகி.
பட்டம் படித்த இவர், விவசாய ஆர்வத்தால் இயற்கை சாகுபடியில் இறங்கினார். பூக்கள் பயிரிட ஆசை கொண்டு 'சம்பங்கி' பூவை தேர்வு செய்தார். ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சம்பங்கி பூவையே தொடர்ந்து பயிரிட்டு லாபம் பார்த்து வருகிறார்.

சாகுபடி எப்படி: ஜெயங்கொண்டானில் இருந்து ரூ.150 க்கு ஒரு கிலோ சம்பங்கி கன்று வாங்கினார். அறுபது சென்ட் இடத்தில் 3 அடி இடைவெளியில் படுக்கை அமைத்து (மண்ணை குவித்து) 2 அடி இடை வெளியில் 3 ஆயிரம் செடிகளை நடவு செய்தார். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுகிறார். இப்படி செய்தால் நடவு செய்து 3 மாதத்தில் பூப்பூக்க துவங்கிவிடும். துவக்கத்தில் நான்கு அல்லது ஐந்து கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஆறு மாதங்களில் தினமும் 20 கிலோ மகசூல் கிடைக்கும். உரமாக ஜீவாமிர்தம் (சாணம், கோமியம், நாட்டு சர்க்கரை, பயறு, சாணிமாவு, தண்ணீர் கலந்தது) கரைசலை தண்ணீருடன் சேர்த்து 15 நாட்களுக்கு ஒரு முறை பாய்ச்சுகிறார். மற்ற பயிர் வகைகள், பூக்களை போன்று சம்பங்கியில் எவ்வித பூச்சி தாக்குதலும் இருக்காது. பராமரிப்பிற்கு என்று தனியே வேலையாட்கள் தேவையில்லை. ஒரு நபர் மட்டுமே போதும்.

சந்தோஷ வாழ்க்கை: சாகுபடி குறித்து வாசுகி கூறியதாவது: சம்பங்கி ஒரு கிலோ ரூ. 80 வரை விலை போகும். விசேஷ நாட்களில் ரூ.1000 கூட போகும். தினமும் 20 கிலோ வரை மகசூல் கிடைத்தால் பராமரிப்பு, மற்றும் இதர செலவுகள் போக தினமும் ரூ.1000 கிடைக்கும். மாதம் ரூ.30 ஆயிரம் எனில் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை லாபம் கிடைக்கும். குறைந்தபட்சம் 25 முதல் 60 சென்ட் வரை சாகுபடி செய்ய ரூ.60 ஆயிரம் செலவு செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். சம்பங்கியில் ஊடுபயிராக வெங்காயம், கொத்தமல்லி, பயறு, முள்ளங்கியும் 
பயிரிடலாம். அதன் மூலமும் தனியே வருமானம் கிடைக்கும். குறைவான செலவில் நிறைவான வாழ்க்கை சம்பங்கியால் கிடைக்கும் என்றார். தொடர்புக்கு 95009 -32613.
- ஆ.நல்லசிவன், திண்டுக்கல்

Source : Dinamalar
.

No comments:

Post a Comment