Thursday, June 30, 2016

உடல் சோர்வை போக்கும் மோர்


9
சிறுநீர் எரிச்சலை தணிக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதும், சோர்வை போக்கவல்லதும், தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியதுமானது மோர். பல்வேறு நன்மைகள் கொண்ட மோரை பயன்படுத்தி நீராகாரம் தயாரிக்கலாம். இரவு முழுவதும் சாதத்தை ஊற வைக்கவும். காலையில் இதை நன்றாக கரைக்கவும். இதோடு சிறுவெங்காய துண்டுகள், தேவையான அளவு உப்பு, மோர் சேர்த்து சாப்பிடலாம்.

காலை வேளையில் இதை தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் தணியும். கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். சோற்று கற்றாழை, மோர் ஆகியவற்றை பயன்படுத்தி உடலுக்கு குளிர்ச்சி தரும் பானம் தயாரிக்கலாம். சோற்று கற்றாழையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் சதையை 7 முறை நீர்விட்டு நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் கசப்பு சுவை போகும்.

கற்றாழையின் சதையை நன்றாக அரைத்து கொள்ளவும். இதனுடன் மோர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை காலையில் சாப்பிட்டுவர உடல் புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் குளிர்ச்சி அடையும். சோற்று கற்றாழையில் மிகுந்த சத்துக்கள் உள்ளன. இது, தீக்காயங்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரும். மலட்டுத் தன்மையை போக்கும்.

மூட்டு வலி உள்ளவர்கள் குளுமையான உணவை உட்கொள்ளுவதால் வலி அதிகமாகும் என அஞ்சுவார்கள். இவர்கள் கூட மோர் சாப்பிடலாம். மோருடன் சுக்கு, மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம். புளிப்பில்லாத மோரில் சிறிது உப்பு, சுக்குப் பொடி, மிளகுப் பொடி சேர்த்து சாப்பிட்டால் வாதம், கபத்தை சமன்படுத்தும். கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்தால் நீர் இழப்பு ஏற்பட்டு தோலில் வறட்சி ஏற்படும். இதை சரிசெய்யும் முறையை காண்போம். தேவையான அளவு மோர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

பின்னர், மெல்லிய துணியை மோரில் நனைத்து 15 நிமிடம் ஒத்தடம் கொடுத்து வந்தால், தோலில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். எரிச்சல் குறையும். பல்வேறு நன்மைகளை கொண்ட மோர் உடல் உஷ்ணத்தை தடுக்கவும், களைப்பை போக்கவும் பயன்படுகிறது. சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும். தோலுக்கு குளிர்ச்சி தருகிறது. மோரை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் எலும்புக்கு பலம் கிடைக்கும். மோரில் வைட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது. மோர் சரிவிகித உணவாக உள்ளது. எளிதாக கிடைக்க கூடியதும், சிறந்த பானமான மோரை பயன்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்கலாம்.

Source : Dinakaran

No comments:

Post a Comment