Tuesday, June 14, 2016

உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி


கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு எளிதில் கிடைக்க கூடிய தர்பூசணி, நன்னாரி போன்றவற்றை கொண்டு தீர்வு காணலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொன்ட நன்னாரி, ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது. உடலுக்கு குளிர்ச்சியைதருகிறது. உள் உறுப்புகளுக்கு பலம் கொடுக்கிறது. வயிற்றுபோக்கை தணிக்க கூடியது. அம்மை வராமல் தடுக்கிறது.

நன்னாரி கொடியின் வேர் பதப்படுத்தப்பட்டு நாட்டு மருந்து கடைகளில் நன்னாரி வேர், பொடியாக கிடைக்கும். வயிற்றுபோக்கை தணிக்கும் நன்னாரி சர்பத்தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: நன்னாரி பொடி, நாட்டு சர்க்கரை, எலுமிச்சை. நன்னாரி பொடியை தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைக்கவும். பின்னர், தண்ணீரை வடிகட்டி எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையுடன் நன்னாரி தண்ணீரை ஊற்றி பாகு பதம் வரும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். பின்னர், ஆற வைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும்.இதில், 30 மில்லி அளவுக்கு எடுத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி கலந்து குடித்துவர வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல், வயிற்றுபோக்கு, வயிற்று கடுப்பு சரியாகும். வெள்ளைபோக்கு பிரச்னையை சரிசெய்கிறது. மூட்டு வலியை போக்க கூடியது.

தர்ப்பூசணியை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்கும் உணவு தயாரிக்கலாம். தர்பூசணி, தயிர், உப்பு, நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய். தர்பூசணியின் வெள்ளை பகுதியை எடுத்து துண்டுகளாக்கி வேக வைத்து எடுக்கவும்.  புளிப்பில்லாத தயிர், உப்பு சேர்க்கவும். இதனுடன் நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளித்து சேர்க்கவும். இதை கலந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

கோடைகாலத்தில் எளிதாக கிடைக்க கூடிய தர்பூசணியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அதிக கனமுள்ளதை வாங்க வேண்டும். சிவப்பான தர்பூசணியில் அதிக சத்து உள்ளது. தர்பூசணி உடலுக்கு புத்துணர்வை கொடுக்கிறது. நீர்ச்சத்தை அளிக்க கூடியது. உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆண்மை குறைவை போக்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்த நாளங்களில் ஏற்படும் கொழுப்பை தடுக்கிறது.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட தர்பூசணி கோடைகாலத்தில் உன்னதமான உணவாக விளங்குகிறது. தர்பூசணி, முலாம் பழம், வெள்ளரி துண்டுகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சாத்துக்குடி சாறு, தேன் சேர்த்து கலந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி அடையும். உடலுக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

Source : Dinakaran

No comments:

Post a Comment