Friday, June 10, 2016

அதிக மகசூல் பெற குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை பயன்படுத்துங்கள் விவசாயிகளுக்கு யோசனை

குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும் என வேளாண் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.  இதுகுறித்து ஒரத்தநாடு வேளாண் உதவி இயக்குநர் பாலசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் அறிவித்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 4 வகை இனங்கள் உள்ளன. 
இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 அவர்களது வங்கி கணக்கில் ஏற்றப்படும். இவ்வினத்தின் கீழ் ஒரத்தநாடு வட்டாரத்திற்கு 5,475 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

எனவே நிலையான நீர் ஆதாரமுள்ள விவசாயிகள் உடன் பாய் நாற்றாங்கால் முறையில் நாற்று விட்டு இயந்திரம் மூலம் நடவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகள் விண்ணப்பம், சிட்டா அடங்கல், வங்கி கணக்கு புத்தக ஒளி நகல், ஆதார் அட்டை, பாய் நாற்றாங்காலில் நின்று ஒரு புகைப்படம், நடவு செய்யும்போது நடவு இயந்திரத்தோடு நின்று ஒரு புகைப்படம் ஆகிய ஆவணங்களை எடுத்து அந்தந்த பகுதி வேளாண் உதவி அலுவலர்களிடம்  அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. பாய் நாற்றங்கால் முறையில் நாற்றுவிட்டு இயந்திர நடவு மேற்கொள்ள ஒரத்தநாடு வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளை அல்லது நிறுவனங்களை அணுகவும்.   

 மேலும் விவசாயிகள் தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களின் மூலமும் நடவு செய்து கொள்ளலாம். 10,000 கிலோ நெல் நுண்ணூட்டம் ஒரத்தநாடு வட்டத்திற்கு வரப்பெற்றுள்ளது. ஒரு ஏக்கருக்கு 5 கிலோ முழு மானியத்தில் வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ சிங்க் சல்பேட் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். நிலையான நீராதாரம் இல்லாத விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய முடியவில்லையெனில் உளுந்து சாகுபடி மேற்கொள்ள 1,375 ஏக்கர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 1ம் தேதிக்கு பிறகு உளுந்து விதைப்பு மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.1,400 மானியம் வழங்கப்படும். 3 அங்குலம் விட்டமுள்ள குழாய்கள் குறுவை சாகுபடி செய்கின்ற நிலையான நீர் ஆதாரம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்படும். 25 யூனிட்டுகள் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் குழாய்கள் பெற்றவர்கள் இந்த வருடம் வாங்க தகுதி கிடையாது.

 குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தை குறுவை விவாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் எடுக்க வேண்டும். மேலும் விவசாயிகள் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment