Thursday, June 30, 2016

வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் விளாம்பழம்



காய்ச்சல், இருமல், சளி பிரச்னைகளை போக்க கூடியதும், வயிற்று கோளாறுகளை சரி செய்யும் தன்மை கொண்டதும், வாயு பிரச்னையை குணப்படுத்த கூடியதுமான விளாம்பழத்தின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது விளாம் பழம். இதை, யானைகள் விரும்பி சாப்பிடும். விளாம்மரத்தின் பட்டை, இலை, பழம் உள்ளிட்டவை பயனுள்ளதாக விளங்குகிறது.

விளாம் மரத்தின் பட்டையை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமரப்பட்டை, அரிசி திப்லி, தேன். விளாமரத்தின் பட்டை 5 கிராம் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 5 அரிசி திப்லி சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி, சிறிது தேன் சேர்த்து தினமும் 100 மில்லி வரை காலை, மாலை குடித்துவர காய்ச்சல், இருமல், சளி, ஆஸ்துமா, விக்கல் ஆகியவை குணமாகிறது.  விளாம் மரத்தின் இலையை பயன்படுத்தி வாயு பிரச்னை, வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளாமர இலைகள், பனங்கற்கண்டு, பால்.

விளாம் மரத்தின் இலைகள் ஒருபிடி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதில் சுக்குப்பொடி சேர்க்கலாம். இந்த தேனீரை குடித்துவர வாயு பிரச்னை குணமாகும். விளாமரம் வீட்டில் வளர்க்க கூடியது. இதன் அனைத்து பாகங்களும் மருந்தாகி பயன் தருகிறது. உடல் எரிச்சலை தணிக்கும். வயிற்று கோளாறுகளை குணப்படுத்தும. வயிற்றில் ஏற்படும் எரிச்சல், அல்சரை சரிசெய்கிறது. விளாம் பழத்தை பயன்படுத்தி பசியின்மை, சுவையின்மை, நீர்வேட்கைக்கான மருந்து தயாரிக்கலாம்.

நன்றாக பழுத்த விளாம் பழத்தின் ஓட்டை நீக்கிவிட்டு சதையை ஒரு பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இதனுடன் சுக்குப்பொடி, நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.இதை வடிகட்டி குடித்துவர வயிறு உப்புசம், பசியின்மை, சுவையின்மை, ஈரல் பாதிப்பு, இதய கோளாறுகள் குணமாகிறது. பித்த சமனியாக விளங்கி செரிமான கோளாறுகளை சரிசெய்யும். பசியை தூண்டக்கூடிய மருந்தாக விளங்குகிறது.

விளாம் மரத்தின் இலையை நன்றாக அரைத்து பூசுவதால் அம்மை, அக்கி கொப்புளங்கள், வியர்குரு விலகி தோல் ஆரோக்கியம் பெறும். வீட்டிலிருக்கும் மஞ்சளை பயன்படுத்தி மூக்கடைப்பு, நீர்வடிதல், தும்மல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. மஞ்சளை சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர்வதால் மூக்கடைப்பு சரியாகிறது. நுரையீரல் ஆரோக்கியம் அடைகிறது. 
Source : Dinakaran

No comments:

Post a Comment