Thursday, June 30, 2016

தூக்கமின்மையை போக்கும் வாழைப்பழம்



மன உளைச்சல் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். தோல்நோய்கள், அஜீரண கோளாறு, இதய படபடப்பு, மலச்சிக்கல், சோர்வு போன்றவை தூக்கமின்மையால் ஏற்படுகிறது. தூக்கத்தை தூண்டுவதற்கு நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களே மருந்தாகிறது. தூக்கமின்மையை போக்கும் தேனீர் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஜாதிக்காய், நெல்லி வற்றல், பனங்கற்கண்டு, மல்லிகை, காய்ச்சிய பால்.ஜாதிக்காயை எடுத்து பொடி செய்து கொள்ளவும்.

இதனுடன், ஊறவைத்து வைத்திருக்கும் நெல்லி வற்றலை தண்ணீருடன் சேர்க்கவும். மல்லிகை பூ, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி காய்ச்சிய பால் சேர்க்கவும். இந்த தேனீரை தூங்கபோகும் முன்பு குடித்தால் நன்றாக தூக்கம் வரும். மனம் அமைதி பெறும். பல நோய்கள் வருவதற்கு காரணமாக இருப்பது தூக்கமின்மை. முறையற்ற உணவுமுறை, இரவு நேரத்தில் அதிகநேரம் கண்விழித்து பணி செய்வது போன்ற காரணங்களாலும் தூக்கமின்மை ஏற்படுகிறது.

மன உளைச்சலுக்கு ஜாதிக்காய் போன்ற வாசனை பொருட்கள் மருந்தாகிறது. வாழைப்பழத்தை கொண்டு தூக்கமின்மைக்கான மருந்து தயாரிக்கலாம். பூவன் வாழைப்பழத்தை மசித்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். தூங்க செல்லும் முன்பு இதை சாப்பிட்டுவர நல்ல தூக்கம் வரும். உடலுக்கு பலம் தரும். செரிமான கோளாறுகளை போக்குகிறது. தூக்கமின்மைக்காக மருந்துகள் எடுத்துக் கொள்ளும்போது மலச்சிக்கல் ஏற்படும். இதை தவிர்க்க வாழைப்பழம் உதவுகிறது.

தூக்கமின்மையை போக்க மருதாணியை பயன்படுத்தி வெளிபூச்சு மருந்து தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இதனுடன், சிறிது மருதாணி இலை விழுது சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை அன்றாடம் தலைக்கு தேய்த்து மசாஜ் செய்தால், உடல் உஷ்ணம் தணியும். கண் எரிச்சல் அடங்கும். கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை மாறும். உடலில் குளிர்ச்சி ஏற்படும். இதனால் தூக்கம் நன்றாக வரும். மருதாணி தூக்கத்தை தூண்டக் கூடியது. உள்ளங்கை, உள்ளங்காலில் ஏற்படும் எரிச்சலை போக்கவும் இந்த தைலத்தை பயன்படுத்தலாம்.

தூக்கத்தை தொலைப்பது என்பது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும். மனதுக்கு ஓய்வு தேவை என்பதால் நன்றாக உறங்குவது அவசியம்.   செம்பருத்தியை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை தணிக்கும்  மருத்துவத்தை காணலாம். செம்பருத்தி பூவை தேங்காய் எண்ணெய்யில் இட்டு காய்ச்சவும். பின்னர், உச்சந்தலையில் ஓரிரு துளிகள் விட்டு மசாஜ் செய்தால் நன்றாக தூக்கம் வரும். கண்களில் எரிச்சல், கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, காய்ச்சல் இருப்பது போன்ற உணர்வு ஆகியவை சரியாகும். 

Source : Dinakaran

No comments:

Post a Comment