Tuesday, June 28, 2016

விழிப்புணர்வு கருத்தரங்கில் அறிவுறுத்தல் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? விவசாயிகளுக்கு ஆலோசனை

நவரை நெற்பயிரில் குலைநோய்தாக்குதலை விவசாயிகள் கட்டுப்படுத்துவது எவ்வாறு என சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் ராஜாஜோஷ்லின் ஆலோசனை  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடியை தொடர்ந்து தற்போது குறுவை மற்றும் நவரை நெற்பயிர்கள் தா.பழூர் பகுதியில்சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் அறுவடை பணி நடைப்பெற்று வருகிறது. தா.பழூர் பகுதியில் ஏனைய இடங்களில் நவரை நெற்பயிர்கள் பரவலாக பயிரிடப்பட்டு வளர்ந்த நிலையில் பசுமையாக தென்படுகிறது. இந்த தருணத்தில் நெற்பயிரில் குலை நோய் தாக்குதலை கட்டுப்படுத்தாவிட்டால் விவசாயிகளுக்கு பெருத்த மகசூல் இழப்பு ஏற்படும். அதிகமாக தலைச்சத்து இடுதல், மேகம் சூழ்ந்த வானமூட்டம், தூறல், அதிகமான ஈரப்பதம் (93,-95 சதவீதம்), பனிக் குறைவான இரவு நேர வெப்பநிலை (20”சி)போன்ற சூழ்நிலை இந்நோய் பரவ காரணமாகும். 

இந்நோய் நாற்றங்காலில் தொடங்கி நடவு வயலில் கதிர்விடும் பருவம் வரை எல்லா நிலைகளிலும் தாக்குகின்றது. நோயின் அறிகுறிகளை இலை கதிரின் கழுத்துப்பகுதி மற்றும் தானிய விதைகளின் மீதும் காணலாம். நோயின் ஆரம்ப நிலையில் சிறிய ஊதா கலந்த பச்சை நிறத்தில் புள்ளிகள் தோன்றி, பின்பு நீள வடிவத்தில் சாம்பல் நிற மையத்தையும், பழுப்பு நிற ஓரத்தையும் கொண்ட பெரிய புள்ளிகளாக மாறும். 

நோய் வளர்ச்சி அடைந்த நிலையில் இலைப் புள்ளிகள் ஒன்று சேருவதால் இலைகள் காய்ந்து இதே மாதிரியான புள்ளிகள் இலை உறையின் மீதும் தோன்றும். மேலும் கடுமையாக  தாக்கப்பட்ட நாற்றங்கால், நெல் வயல், எரிந்து போனது போல் தோற்றமளிக்கும். நோயால் பாதிக்கப்பட்ட கதிரின் கழுத்துப் பகுதி உடைந்துவிடும் ஆகியவற்றை இந்நோயின் அறிகுறிகளாகும். 

இந்நோயை கட்டுப்படுத்த களைகளை கட்டுப்படுத்தி அழித்தல் வேண்டும் மற்றும் தழைச்சத்தை பலமுறை பகிர்ந்து இடுதல் அவசியமாகும். மேலும் நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 20 கிலோ நன்கு மக்கிய சாண எரு கலந்து இட வேண்டும். சூடோமொனாஸ் பாக்டீரீரியாவை 10 கிராம் ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைநேர்த்தி செய்வதன் மூலம் நாற்றங்காலில் தோன்றும் நோயைக்கட்டுப்படுத்தலாம். 

வளர்ந்த பயிர்களில் நோய் தோன்றும் போது கார்பன்டசிம் 50 டபிள்யு 200 கிராம் ஏக்கர் அல்லது ட்ரைசைக்லோசோல் 75 டபிள்யு 200 கிராம் ஏக்கர் மற்றும் 200 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் கலந்து தெளித்து இடுவதன் மூலம் குலை நோயை கட்டுப்படுத்தி மகசூல் இழப்பை தடுக்க முடியும்  எனத் ெதரிவித்துள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment