Wednesday, August 19, 2015

நேரடி நெல் வரிசை விதைப்புக்கு மானியம் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டுகோள்



ராமநாதபுரம், : ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நேரடி நெல் வரிசை விதைப்புக்கு மானியம் பெற விவசாயிகள் பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 19 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மானாவரியில் நேரடி விதைப்பாக நெல் விதைக்கப்படுகிறது. மழையை எதிர்நோக்கி விதைக்கும் பொழுது விவசாயிகள் ஏக்கருக்கு 30 கிலோ நெல் விதை பயன்படுத்துகின்றனர். நடப்பாண்டில் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் 7 ஆயிரத்து 200 ஹெக்டேர் வரை நேரடி நெல் வரிசை விதைப்பு தொழில்நுட்பத்தில் விதைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பத்து ஆண்டுகளுக்கு உட்பட்ட நெல் ரகங்களை (குறிப்பாக என்.எல்.ஆர். 34449 மற்றும் அண்ணா-4 ரகங்கள்) பயன்படுத்தி விதைக்கும் கருவி கொண்டு வரிசை விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.
நெல் வரிசை விதைப்பிற்கு ஏக்கருக்கு 16 முதல் 20 கிலோ போதுமானது. நெல் வரிசை விதைப்பில் முளைப்பு சீராக இருக்கும். பயிர் இடைவெளி நன்கு பராமரிக்கப்படுவதால் காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சத்தால் நன்றாக அடிப்பகுதி வெடித்து மகசூல் அதிகம் கிடைக்கும். பூச்சி நோய் தாக்குதலும் குறைவாக இருக்கும்.

விதைப்பிற்கு முன்பு விதை நெல்லை ஒரு சதவீதம் பொட்டாஷ் கரைசலில் விதை நேர்த்தி செய்தால், விதைக்கும் பொழுது நல்ல முளைப்புத்திறன் மற்றும் ஆரம்ப கால வளர்ச்சியை தாங்கி வளரும். நேரடி நெல் வரிசை விதைப்புக்கு ஹெக்டேருக்கு வழங்கும் ரூ.5 ஆயிரம் மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் பெறும் விதை நெல், நுண்ணூட்டம் மற்றும் திரவ உயிர் உரம் ஆகியவற்றிற்கான மானியம் கழிக்கப்பட்டு மீதத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த செயல் விளக்கம் 100 ஹெக்டேரில் தனித்தனி தொகுதியாக செயல்படுத்தப்படும் என்பதால் ஒரு விவசாயி அதிகபட்சம் 2 ஹெக்டேர் அளவில் பயன்பெறலாம்.
 

இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் தங்கள் நில உடமை ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். தற்போது ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ஆனந்தூர் வேளாண்மை விரிவாக்க மையங்களில் விதை நெல், உயிர் உரம், நுண்ணூட்டம் மற்றும் உயிர் பாதுகாப்பு மருந்துகள் இருப்பில் உள்ளன. விவசாயிகள் இடுபொருள் தேவை மற்றும் திட்டங்கள் பற்றிய விபரங்களுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 04561-251265, 95669 43421 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என உதவி இயக்குநர்(பொ) உலகுசுந்தரம் தெரிவித்துள்ளார்.

 Source:


No comments:

Post a Comment