Monday, September 21, 2015

பயிர் விளைச்சல் போட்டி: புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் பங்கேற்க முன் பதிவு செய்யலாம்



மாவட்ட மற்றும் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பங்கேற்க விரும்பும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள்  முன் பதிவு செய்ய வேண்டுமென வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து புதுக்கோட்டை வேளாண் இணை இயக்குநர் த. சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மாநில அரசு சிறந்த சாகுபடி முறைகளைக் கடை பிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து  உற்பத்தித் திறன், விளைச்சலை உயர்த்தும் நோக்கில் மாநில, மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டிகளை  ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் மற்றும் இறவை நிலக் கடலை பயிரில் மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் முன் பதிவு செய்ய வேண்டும்.
 புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடப்பாண்டில் மாவட்ட அளவில் நடத்தப்படும் சம்பா நெற் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்திருத்தல் வேண்டும்.  இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொண்டு நெல் பயிருக்கு  ரூ.100 -ம்,  நிலக்கடலைக்கு ரூ.50-ஐயும் முன் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் குறைந்தது 50 சென்ட் சாகுபடி நெல் பயிரில் செய்திருக்க வேண்டும்  மாவட்ட அளவில் அதிக மகசூல் செய்துள்ள  விவசாயிகளுக்கு முதல் பரிசு ரூ. 15 ஆயிரமும், இரண்டாவது பரிசு ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது.
சிறப்பு விருது:
நடப்பாண்டில் மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக மகசூல் செய்துள்ளம் விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் ரொக்கம், ரூ. 3,500 - மதிப்புள்ள பதக்கமும் குடியரசு தின விழாவில் தமிழக முதலமைச்சரால் வழங்கப்படும்.
  இந்த போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் முன் பதிவு கட்டணமாக ரூ. 150-ஐ தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
 இப்போட்டியில் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வரும் ஆண்டில் வழங்கப்படும். இந்த விருது போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள போட்டி விதிமுறைகளை அறிய தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். 

http://www.dinamani.com/edition_trichy/pudukottai/2015/09/20/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/article3037580.ece

No comments:

Post a Comment