Monday, October 5, 2015

அடுத்த 24 மணி நேரத்தில், வட மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு



அடுத்த 24 மணி நேரத்தில், புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தென் மேற்குப் பருவ மழைக் காலத்தில் ஏற்பட்ட வெப்ப சலனத்தால், தற்போது மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பரவலாக மழை பதிவாகி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அனேக இடங்களில் மழை பதிவாகி இருக்கிறது.
இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 100 மி.மீட்டர் மழை பதிவாகியது. அதற்கு அடுத்தப்படியாக காஞ்சிபுரம் மாவட்டம் கேவிகே காட்டுப்பாக்கத்தில் 80 மி.மீ, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, வந்தவாசி, புதுக்கோட்டை மாவட்டம் அரந்தாங்கி, ஆலங்குடியில் 70 மி.மீ, புதுக்கோட்டை மாவட்டம் மனமேல்குடி, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி, கடலூர், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட இடங்களில் 50 மி.மீட்டர் மழை பதிவாகியது.
பலத்த மழை:
புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்களில், செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்து வரும் நாள்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில், நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment