Monday, February 1, 2016

50 சதவீத மானியத்தில் உயர்ரக விதைகள் நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி திறன் 25 சதவீதம் அதிகரிப்பு கலெக்டர் சங்கர் தகவல்



ஊட்டி
50 சதவீத மானியத்தில் உயர்ரக விதைகள் வழங்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி திறன் 25 சதவீதம் அதிகரித்து உள்ளதாக மாவட்ட கலெக்டர் சங்கர் தெரிவித்து உள்ளார்.
கலெக்டர் ஆய்வுஊட்டி அருகே கட்டபெட்டு பகுதியில் தமிழக அரசின் மானிய உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் காளான் உற்பத்தி மையம் மற்றும் கொய்மலர் சாகுபடி செய்யும் பசுமை குடில்களை மாவட்ட கலெக்டர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தோட்டக்கலை துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.4 கோடியே 91 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காய்கறிகள், வாசனை பயிர்கள், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பழம் மற்றும் காய்கறி சாகுபடி செய்தல் உள்ளிட்டவை மானியத்துடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பின்னேற்பு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் காளான் உற்பத்தி செய்ய ரூ.40 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு மானியமாக ரூ.16 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
நவீன தொழில்நுட்பம்கட்டபெட்டு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள காளான் உற்பத்தி மையம் நவீன தொழில்நுட்ப முறையில் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் காளானுக்கு தேவை அதிகமாக உள்ளது. எனவே இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.16 லட்சம் வருமானம் கிடைக்கும். காளான் உற்பத்தி செய்ய குறைந்த அளவிலான இடமும், தண்ணீர் வசதியும் இருந்தால் போதுமானதாகும். கொய்மலர் சாகுபடியில் ஆசியாடிக், ஒரியண்டல் என 2 வகையான பூக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆசியாடிக் மலர்கள் குறைந்த காலத்தில் பூக்கும் தன்மை கொண்டது. ஆனால் அதிகளவு லாபம் கிடைக்காது. ஒரியண்டல் பூக்கள் நறுமணம் கொண்டதோடு, நீண்ட நாட்கள் வாடாமல் இருக்கும். இந்த மலர்களுக்கு அதிக கிராக்கி உள்ளது.
இந்த மலர்கள் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தரமான 3–க்கும் மேற்பட்ட மொட்டுக்கள் கொண்ட ஒரு செடிக்கு ரூ.35 முதல் ரூ.45 வரை விலை கிடைக்கிறது. கொய்மலர் சாகுடி செய்ய 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. நீலகிரியில் 70 லட்சம் சதுர மீட்டர் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு ரூ.3 கோடியே 26 லட்சம் மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
காய்கறி உற்பத்தி திறன் அதிகரிப்பு
நீலகிரியில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் 2 ஆயிரத்து 78 ஹெக்டர் பரப்பளவிற்கு பாசன கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் காய்கறிகள் கூடுதலாக 900 ஹெக்டர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் உயர்ரக காய்கறி விதைகள் வழங்கப்படுவதால் நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி திறன் 25 சதவீதம் அதிகரித்து உள்ளது. நீலகிரியில் விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு மானியத்துடன் 81 பவர் டில்லர் எந்திரங்கள், 25 மினி டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மணி, துணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் உமா ராணி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment