Thursday, February 25, 2016

நிலக்கடலை, எள்ளில் பயிர் மேலாண்மை பயிற்சி

விராலிமலை வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில் விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்  பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. விராலிமலை அருகே தென்னம்பாடியில் நடைபெற்ற இப் பயிற்சியில் விராலிமலை வட்டார வேளாண் உதவி இயக்குநர் எட்வர்ட்சிங்  நிலக்கடலை மற்றும் எள் பயிரில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பருவங்கள், விதைகளை தேர்வு செய்தல், விதை நேர்த்தி செய்தல் மற்றும் விதை நேரத்தி செய்தல் முக்கியத்துவம், பூச்சி, நோய் தாக்குதல் மேலாண்மை முறைகள் பற்றி விளக்கமளித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் லெட்சுமிபிரபா  பயிர் எண்ணிக்கையை பராமரித்தல் பற்றியும், இயற்கை உரம் மற்றும் உயிர் உரங்கள் இடுவதின் முக்கியத்துவம் குறித்தும், களை மற்றும் நீர் நிர்வாகம் பற்றியும்  விளக்கினார். உதவி வேளாண் அலுவலர் சேகர், நிலக்கடலையில் ஜிப்சம் இடுவதின் முக்கியத்துவம் பற்றியும், ஒருங்கிணைந்த உர நி்ர்வாகம் மற்றும் நுண்ணூட்டச் சத்து கலவை தெளிப்பது பற்றியும்  விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் எள் பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய் பற்றி விளக்கும் படம்  விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்கப்பட்ட வயலை விவசாயிகள் பார்வையிட்டு மேலாண்மை முறைகளை கேட்டறிந்தனர். விவசாயிகளுக்கு நிலக்கடலை மற்றும் எள் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்  பற்றிய பயிற்சி  கையேடு வழங்கப்பட்டன. கூட்டத்திற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சுப்பிரமணி மற்றும் உமாமகேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். 

source : dinakaran

No comments:

Post a Comment