Thursday, February 25, 2016

விவசாயிகளுக்கு உழவர் சந்தை மூலம் அதிக லாபம் கிடைக்கும்

விவசாயிகள் தங்களது காய்கறி உள்ளிட்ட விளை பொருட்களை உழவர் சந்தை மூலம் விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது.  கடலூர்  வேளாண்மை துணை இயக்குனர் ஆறுமுகம், விருத்தாசலம் வேளாண்மை அலுவலர்  பிரேமலதா ஆகியோர் வெளியிட்டுள்ள  செய்திகுறிப்பு: விவசாயிகள் பாடுபட்டு உற்பத்தி செய்த விளை பொருட்களை விற்கும் போது  அவர்களின் உழைப்பிற்கேற்ற பலனை அடைய  முடிவதில்லை. காய்கறிகள், பழங்கள்  பயிரிடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் அப்பொருட்களை நகர்  பகுதிகளுக்கு  கொண்டு சென்று நியாயமான விலைக்கு விற்பதற்கும் உழவர் சந்தை  ஏற்படுத்தப்பட்டுள்ளது. உழவர் சந்தையில் விவசாயிகள் தங்கள்  வயலில்  விளையும் காய்கறிகள், பழங்களை இடைத்தரகர்கள் அல்லது வியாபாரிகள் குறுக்கீடு  இல்லாமல் நேரடியாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் விற்கலாம். உழவர்  சந்தையில் விற்கக்கூடிய காய்கறிகள் விலை மொத்த விற்பனை  விலையைக்  காட்டிலும் அதிகமாக  நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு வெளி  சந்தையில் விற்பதைக் காட்டிலும்  அதிக லாபம் கிடைக்கும். உழவர் சந்தையில்  கடைகளுக்கு வாடகை மற்றும் கட்டணங்கள் ஏதும் கிடையாது. வியாபாரிகளுக்கு தராசு, எடைக்கற்கள், தட்டு போன்ற உபகரணங்கள் எவ்வித கட்டணமும் இன்றி  வழங்கப்படுகிறது. கிராமங்களில் இருந்து உழவர் சந்தைக்கு பேருந்துகளில்   சுமை கட்டணம் இல்லை. 
காய்கறி சாகுபடி, தொழில் நுட்ப முறைகள் பற்றி  விவசாயிகளுக்கு ஆலோசனை பெறலாம். பொது மக்களுக்கு பசுமையான காய்கறிகளை,  சரியான எடையில், நியாயமான விலையில் கிடைக்க  செய்வதன் மூலம் விவசாயிகள் மன  நிறைவு பெறலாம். எனவே காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும்  விவசாயிகள்  உழவர் சந்தை வேளாண் அலுவலரை அணுகி உழவர் சந்தை அடையாள அட்டை  பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

Source : dinakaran

No comments:

Post a Comment