Monday, February 29, 2016

இயற்கை முறையில் மா சாகுபடி: 100 விவசாயிகளுக்குப் பயிற்சி


பெரியகுளம்,ஆண்டிபட்டி பகுதிகளில் பாரம்பரிய முறையில் இயற்கை வழியில் மாம்பழங்களை சாகுபடி செய்வதற்கு 100 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோட்டக் கலைத் துறை அலுவலர்கள் கூறியதாவது: தேசிய தோட்டக் கலை இயக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய முறையில் ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கை வழியில் ஏற்றுமதி தரத்திலான மாம்பழங்கள் சாகுபடி செய்வதை ஊக்குவிப்பதற்கு பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய பகுதிகளில் தலா 50 ஏக்கர் பரப்பளவில் செயல் விளக்கத் திடல் அமைத்து, தலா 50 விவசாயிகளை கொண்ட 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு உறுப்பினர்களுக்கு இயற்கை வழியில் மாம்பழங்கள் சாகுபடி செய்யவும், மண் புழு உரம், உயிர் உரம் தயாரிப்பது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற குழுக்களுக்கு பாரம்பரிய முறையில் இயற்கை வழியில் மாம்பழங்கள் சாகுபடி செய்ய தலா ரூ.6.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்பட்ட மாம்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு நிறுவனம் மூலம் அனுமதி பெற்றுத் தரப்படும் என்றனர்.


Source : Dinamani

No comments:

Post a Comment