Monday, March 21, 2016

மூலிகை பண்ணையை விரிவுப்படுத்த வேளாண் பல்கலை.யுடன் ஒப்பந்தம்

மூலிகை பண்ணையை 50 ஏக்கர் பரப்பளவில் விரிவுப்படுத்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தெரிவித்தார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சமூக அறிவியல் துறை சார்பில் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் தீர்வும், இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில் தலைமை வகித்து துணைவேந்தர் பாஸ்கரன் பேசும்போது, இயற்கை பேரிடர் இறைவன் தருகிற எச்சரிக்கையாகும். எனவே அவைகளை உணர்ந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்காக இளைஞர்களாக நீங்கள் தயார்படுத்தி கொள்ள வேண்டும். இதுபோன்ற பேரிடர் காலங்களில் பேரிடர் மேலாண்மை இயக்கத்தோடு தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் களத்தில் இறங்கி இணைந்து செயல்பட வேண்டும். 

இயற்கை சீற்றத்துக்கு தனி மனிதனால் தீர்வுதர முடியாது. சமுதாயத்துடன் இளைஞர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் இயற்கை பேரிடரை எதிர்கொள்ள முடியும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தற்போது ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மூலிகை பண்ணையை 50 ஏக்கரில் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

கருத்தரங்கை துவக்கி வைத்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி பேசுகையில், அறிவு சார்ந்த ஆற்றலோடு செயல்படும்போது விஞ்ஞானம் நமக்கு வழிகாட்டும். பேரிடர் காலத்தில் ஏற்படுகிற அழிவை பாதுகாக்க கிழக்கு கடற்கரை சாலைகளில் மரம், செடிகளை அதிகம் வளர்க்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை என 2 பருவங்களில் மழை பெய்கிறது. இம்மழை காலங்களில் கிடைக்கக்கூடிய தண்ணீரை ஏரி, குளங்களை அமைத்து சேமிக்க வேண்டும். வடிகால் நிலங்களை சரியாக வைத்து கொண்டால் நீரை சேமிக்கலாம் என்றார்.

கடலூர் கடற்கரையோர மக்கள் வாழ்வுரிமை இயக்க அமைப்பாளர் ரமேஷ்பாபு, தஞ்சை இந்திய செஞ்சிலுவை சங்கம் முதலுதவி பயிற்சியாளர் ஆகியோர் பேசினர். தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் விஞ்ஞானம், துறைத்தலைவர் சுப்பிரமணியன், உதவி பேராசிரியர் மதியழகன், லூயிஸ் திரவியல் பங்கேற்றனர்.

source : dinakaran

No comments:

Post a Comment