Saturday, March 26, 2016

இயற்கை விவசாயம் தேசத் துரோகமா?

 வேளாண்மைத் துறையில் மரபணு மாற்ற விதைகள் தொடர்பாக ஆராய்ச்சி செய்யும் ஒருசில விஞ்ஞானிகள் தம்மை தேசபக்தர்கள் என்று காட்டிக்கொள்வதற்காக, அதிக எரிசக்திப் பயன்பாட்டில் உற்பத்தியாகி அதிக எரிசக்திப் பயன்பாட்டில் (போக்குவரத்து) வினியோகமாகும் ரசாயன உரங்களையும், உயிர்க்கொல்லிகளையும் தூக்கிப்பிடித்து எதிர்காலத்தில் மக்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற மரபணுமாற்ற விதை விவசாயமே சரியான தீர்வு என்று பேசுகின்றனர்.
 அதேசமயம், இயற்கை வழி விவசாயத்தால் உற்பத்தி உயராது என்பதுடன் இயற்கை விவசாயிகளை தேசப்பற்று இல்லாதவர்கள் என்று ஏசவும் தொடங்கிவிட்டனர். எனினும், உண்மை எதுவெனில் இயற்கை விவசாயிகள் நலவாழ்வில் அக்கறையுள்ளவர்கள், நாட்டுப்பற்றில்லாத கன்னையகுமார்கள் அல்லர்.
 அகில உலகத்திலும் விவசாயத்தை ஆட்சி செய்வது இயற்கைக்கு மாறான, நோய்க்குறியுள்ள ரசாயன விவசாயமே. அகில உலகத்திலும் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 4 சதவீத நிலமே இயற்கை வழியில் இயங்குகிறது. இந்திய நிலை இன்னமும் குறைவு. 2 சதவீதம் தேறுவதே கடினம். மிகக் குறைந்த விளை நிலப்பரப்புள்ள சிக்கிம் மாநிலம் மட்டும் விதிவிலக்கு. இந்த ஒரு மாநிலத்தில் மட்டும் இயற்கை விவசாயம் முழுமை பெற்றுள்ளது.
 பொதுவாக, வடகிழக்கு மாநிலங்களின் விவசாயத்தில் மரபணு மாற்ற விதைகள் நுழையவில்லை. ரசாயனப் பயன்பாடும் குறைவு என்றாலும் அம்மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் இல்லை. அரிசி உற்பத்தியில் முதல்நிலை வகிக்கும் மேற்கு வங்கத்திலும் விவசாயிகளின் தற்கொலை அரிது. நவீன விவசாயத்தில் கொடிகட்டிப் பறக்கும் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் ஏன்? சுமார் 80 சதவீதம் பருத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள் மரபணு மாற்றிய மான்செண்டோ விதைகளின் காரணமாகப் போதிய விலை இல்லாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். 
 மரபணு மாற்றம் என்பது விதைப் புரட்சியின் ஓர் அம்சம். பசுமைப் புரட்சியை உருவாக்கிய நார்மன் பார்லாக், குள்ளரக மெக்சிகன் வெள்ளை கோதுமையைக் கண்டுபிடித்த அதே நுட்பத்தில் ஐ.ஆர்.8, தைச்சுங் போன்ற குள்ளரக நெல் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி வீரிய ரக விதைகளில் செய்யப்பட்ட மரபணு மாற்றத்தில் நச்சுயிரிகளைப் பயன்படுத்தவில்லை. பார்லாக் செய்த D.N.A. (De Oxyribo Nucleic Acid) மரபணு மாற்றத்தில் கோதுமை, நெல் விதைகளில் உள்ள நார்ப் பொருள் மூலக்கூற்றை அகற்றி மாவாகும் மணி மூலக்கூற்றை ஏற்றியதில் அவ்விதைகள் மூலம் விளைந்த பயிர்களில் 5 அடி உயரம் வளர வேண்டிய வைக்கோல் 2 அல்லது 3 அடி உயரமே வளர்ந்து கதிர்களில் மணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்தது. இதுபோன்ற மரபணு ஆராய்ச்சிகளில் நச்சுயிரிகள் பயனாகவில்லை.
 மரபணு ஆராய்ச்சியில் ஒரு தாவரத்தில் மற்றொரு தாவரத்தின் மூலக்கூற்றை D.N.A. செய்து ஏற்றித் தரலாம்; தவறு இல்லை. ஒரு தாவரத்தில் பூச்சி, புழு, விலங்குகளின் மூலக்கூற்றை ஏற்றி D.N.A. செய்வது ஒழுக்கக் கேடு. விதையின் D.N.A. மாற்றத்தில் நச்சுயிர் ஏற்றுவது விஞ்ஞான விபரீதம் என்று ஒரு கருத்தரங்கில் முன்னாள் கோவை வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஜெயராஜ் குறிப்பிட்டார்.
 மரபணு மாற்றம் விஞ்ஞானத்திற்கு - குறிப்பாக நச்சுயிரி செலுத்தப்பட்ட பி.ட்டி. நெல், மக்காச்சோளம், பருத்தி விதைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உலகளாவியது. மாலிக்யுலர் ஜென்ட்டிக்ஸ் பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஆண்டோனியோ போன்றோர் பி.ட்டி. அரிசி, கத்தரி, மக்காச்சோள உணவு புற்றுநோயை ஏற்படுத்தும் என்று திடமாகக் கூறுகின்றனர். பி.ட்டி. பருத்தி விதை பசுக்களுக்கு நோய் ஏற்படுத்தும்.
 இந்தியாவிலிருந்து பாசுமதி பிரியாணி அரிசி (பாரம்பரிய ரகம்) அமெரிக்க - ஐரோப்பிய அங்காடிகளைக் கவர்ந்து விட்டது. இதை முறியடிக்க டாக்ஸ்மதி என்ற பி.ட்டி. பிரியாணி அரிசியை மான்சென்டோ உருவாக்கியது. ஆனால், ஐரோப்பிய நாடுகள் பி.ட்டி. அரிசிக்குத் தடை விதித்ததால் இந்தியாவில் கடைபோட்டார்கள். இந்திய அரிசி ஏற்றுமதியாளர் சங்கமே பி.ட்டி. அரிசி சோதனை வயல்களை எரித்து எதிர்ப்புக் காட்டியதால் அடங்கிப் போயினர். மரபணு மாற்ற விதைகள், உயிர்க்கொல்லி, ரசாயன உரங்களால் அபாயமில்லை என்ற வாதம் எடுபடாது. அந்த அளவில் இயற்கை விவசாய விழிப்புணர்வு வளர்ந்துவிட்டது.
 குறிப்பாக மரபணு மாற்ற விதைகளின் சோதனை வயல்களுக்கு கேரளம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, பிகார், தில்லி ஆகிய மாநிலங்கள் தடை செய்துவிட்டன.
 இந்தியாவில் 2ஜி ஊழல் தெரியும்; நிலக்கரி ஊழல் தெரியும்; மரமணு மாற்ற விஞ்ஞான ஊழல் தெரியுமா? என்.ஆர்.சி.பி. எனப்படும் புனே பயோ தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்திற்கு யு.எஸ். பயோ தொழில்நுட்ப உடன்பாட்டு அடிப்படையில் 250 மில்லியன் டாலர் உலக வங்கி வழங்கியது. இதில் மரபணு மாற்றம் விஞ்ஞானிகள் சுருட்டிய தொகை மன்னிக்க முடியாத குற்றம். கணக்கு வழக்கு பார்க்கும் அரசு தணிக்கையாளர்கள் இந்த ஊழலை அம்பலப்படுத்தியும், சரத்பவார் தலையீட்டால் அமுக்கப்பட்டுவிட்டது. எனினும், ஊடகங்களில் கசிந்த துளிகளில் சில:
 மரபணு மாற்றம் - பி.ட்டி. அரிசி தொடர்பாகக் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் உருவான புனே பயோ தொழில்நுட்ப ஆய்வு நிலைய டீன் டாக்டர் எஸ்.கே. ரெய்னா சுய ஓய்வு பெற்றுக்கொண்டு அரசு சம்பளத்தைவிடப் பன்மடங்கு உயர்வான சம்பளத்துடன் 2004-இல் மான்சென்டோவில் சேர்ந்தார். அரசுப் பணத்தில் ஆராய்ச்சி செய்து தஸ்தாவேஜூகளையும் கூடவே திருடிக்கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகத் தகவல்!
 இதுபோல் டாக்டர் பன்சாலும் சுயஓய்வு பெற்றுக் கூடுதல் சம்பளத்தில் பன்னாட்டு விதை நிறுவனத்திற்குச் சென்றபோது, ஆராய்ச்சி தொடர்பாக அரசு தஸ்தாவேஜூகளையும் திருடிக்கொண்டு போனதாகக் கூறப்படுகிறது. பி.ட்டி. பிக்கனீர் பருத்தி விதையைக் கண்டுபிடித்த விஞ்ஞானி. பி.ஏ. குமாருக்கு சரத்பவார் "சர்தார் படேல் விருது' வழங்கினார். ஆனால், அந்த விதையை நம்பிப் பயிர் வைத்த பல விவசாயிகள் காய்ப்புழுத் தாக்குதலால் நஷ்டமுற்றுக் கடன் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். பி.ட்டி. பிக்கனீர் டூப்ளிகேட் விதை என்று பின்னர் நிரூபணமானது.
 வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்த அடிப்படையாக மண்ணை வளப்படுத்த வேண்டும். 1994-இல் நிகழ்ந்த ரியோ பூமி மகாநாட்டின் மிக முக்கியப் பிரகடனம் மண்ணை வளப்படுத்தும் வளங்குன்றா வேளாண்மை (Sustainable Agriculture). இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு அடிகோலிய அதே டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பூமி மகாநாட்டுப் பிரகடனத்தை ஏற்று இன்று மண்வளம் போற்றும் இயற்கை விவசாயத்திற்கும், பயோடைவர்சிட்டியை வளர்க்கும் பாரம்பரிய விதை வங்கிக்கும் உதவுகிறார். முதலில் நல்ல மண் இருந்தால்தான் நல்ல விதை நல்ல விளைச்சல் தரும். முதலில் மண், இரண்டாவதுதான் விதை. 
 இயற்கை வழி என்றாலும் ரசாயன வழி என்றாலும் எல்லா நிலங்களிலும் சமமான விளைச்சல் பெறவே முடியாது. நல்ல விளைச்சலைத் தீர்மானிப்பது மண்ணில் உள்ள கரிமச்சத்து. எல்லா நிலங்களிலும் கரிமச்சத்து அதாவது ஹூமஸ் (HUMUS) சமனாக இருப்பதில்லை. ஹூமஸ் பெற மண்ணில் இயற்கை இடுபொருள் பயன்படுத்த வேண்டும். ஒரு ஹெக்டேரில் 7 டன், 8 டன், 10 டன் நெல் விளைவித்த சாதனையாளர்களின் உழவியல் நுட்பத்தைக் கவனித்தால் அவர்கள் நிறைய இயற்கை இடுபொருள் வழங்கி மண்ணில் கரிமத்தை உயர்த்தியபின் சற்று ரசாயன உரங்களை அளவுடன் வழங்கியிருப்பார்கள்.
 பொதுவாக இயற்கை விவசாயிகள் பாரம்பரிய விதைகளைப் பயன்படுத்துவதில் ஆர்வமாயுள்ளவர்கள். இன்று பாரம்பரிய நெல் வகைகளில் மாப்பிள்ளை சம்பா, பெருங்கார், கவுனி, பிசி போன்றவை சிவப்பு நிற அரிசியைத் தரும். இவ்வாறே கருப்பு நெல், கருங்கார், கருங்குறுவை கருப்புநிற அரிசி தரும். இவை மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தவை; நல்ல விலையும் உண்டு. வீரிய ஒட்டு ரக நெல் நிறைய விளைச்சல் தரலாம். ஆனால், பாரம்பரிய நெல் சாகுபடியில் விளைச்சல் குறைவாக இருக்கும். நஞ்சில்லா உணவும் நல்வாழ்வு உணவும் தயாரிப்பவர்கள் தேசத் துரோகிகள் அல்லர். அமெரிக்காவில் இயற்கை விவசாயத்தைத் தோற்றுவித்த ஜே.ஆர். ரொடேலுக்கும் இதே சோதனை வந்தது. ரசாயன உர நிறுவனங்கள் இவரை தேசத் துரோகி என்று தூற்றின. 1942-இல் இவர் பென்சில் வேனியாவில் "எம்மாவுஸ்' என்ற பண்ணையை வாங்கி இயற்கை விவசாயம் செய்ததுடன், கூடவே ஓர் அச்சகத்தையும் நடத்தி ஆல்பர்ட் ஹோவார்டின் "விவசாய உயில்' நூலையும் வெளியிட்டார். 
 "ஹெல்த் ஃபைண்டர்' என்ற பெயரில் ஒரு கையேட்டை வெளியிட்டு, அதில் "ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ ரசாயன விவசாயத்தைப் புறந்தள்ளிவிட்டு பாரம்பரிய விதைகளைக் கொண்டு இயற்கை விவசாயம் செய்து நஞ்சில்லா உணவை நல்ல மண்ணில் விளைவித்து உண்டால் மரண பயம் இல்லை' என்றார். இது அமெரிக்க அரசுக்கு எரிச்சல் மூட்டியது. இவரது "ஹெல்த் ஃபைண்டர்' கையேடு தடை செய்யப்பட்டது. "ரசாயன உணவைப் புறக்கணித்துவிட்டு இயற்கை வழியில் விளைந்ததை உண்ணுங்கள்...' என்று எழுதியது தேசத் துரோகமா? என்று இவர் கூறிய வாதத்தை ஏற்று இவர் விடுதலை செய்யப்பட்டு இவர் கையேட்டுக்குப் போட்ட தடையும் உடைக்கப்பட்டது. இதனால் பெற்ற விளம்பரத்தால் இவரது "ஹெல்த் ஃபைண்டர்' பல லட்சம் பிரதிகள் விற்கப்பட்டதும் நூற்றுக்கணக்கில் இயற்கை விவசாயப் பண்ணைகள் உருவாக்கப்பட்டதும் தொடர் கதை.
 இந்திய இயற்கை விவசாய வரலாற்றில் 18.1.2016 ஒரு பொன்னாள். பிரதமர் அன்றுதான் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் "சிக்கிம் ஆர்கானிக்' என்ற வணிகக் குறியீட்டை வெளியிட்டு சிக்கிம் முதல்வர் பவான் சாம்லிங்குக்கு ஒட்டுமொத்த மாநிலத்தையே இயற்கை வழிக்கு மாற்றியமைத்த பணிக்கு இரண்டு கேடயங்களை வழங்கினார். 
 நவீன விவசாயம் செய்துள்ள சாதனைகளில் கடந்த முப்பது ஆண்டுகளில் சுமார் மூன்று லட்சம் விவசாயிகளின் தற்கொலைகள் முக்கியமானது. பஞ்சாபில் மட்டும் மரபணு மாற்றப் பருத்தி சாகுபடி மட்டுமல்ல; டிராக்டர் கடனை அடைக்க முடியாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இறந்துள்ளனர். பஞ்சாப் அரசின் சின்னம் டிராக்டர். பஞ்சாபின் கதை தமிழ்நாட்டில் தொடர்கிறது. சோழகன் குடிகாடு விவசாயி பாலன் கடைசி இரண்டு தவணைகள் செலுத்தாததால் வங்கி வழக்குத் தொடர்ந்து ஒரு கிரிமினலைப்போல் தாக்கப்பட்டுள்ளார். 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையாவை காவல் துறை நெருங்க முடியுமா? பாலன் தாக்கப்பட்டச் செய்தியை அடுத்து அரியலூரில் அழகர் என்ற விவசாயி டிராக்டர் கடன் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார்.
 டிராக்டர் கடன் காரணமாக எதிர்காலத்தில் இன்னும் எத்தனை தமிழ்நாடு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்களோ, புரியவில்லை. இயற்கை வழி விவசாயத்தில் தற்கொலைக்கு இடம் இல்லை. எல்லைப் புறங்களில் காவல் புரியும் பல்லாயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் இந்திய மண்ணைக் காக்கப் போராடுவதைப் போலவே மண்ணின் வளத்தை மீட்பதில் இயற்கை விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். "தாய் மண்ணே வணக்கம்' என்பதுவே இயற்கை விவசாயிகளின் வேதமாக உள்ளபோது, இயற்கை விவசாயம் எப்படி தேசத் துரோகமாகும்?

Source : Dinamani

No comments:

Post a Comment