Friday, March 4, 2016

கடன் பெறாத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம் 15-ந்தேதி கடைசி நாள்

கடன் பெறாத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ள வருகிற 15-ந்தேதி கடைசி நாள் ஆகும் என்று திருவாரூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மயில்வாகனன் தெரிவித்தார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இழப்பீடு 

நடப்பாண்டில் நெல் தரிசில் சாகுபடி செய்துள்ள பருத்தி பயிரை தேசிய வேளாண் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்திட கடன் பெற்ற விவசாயிகளுக்கு வருகிற 31-ந் தேதியும், கடன் பெறாத விவசாயிகளுக்கு வருகிற 15-ந் தேதியும் கடைசி நாளாகும். இதன் மூலம் இயற்கை சீற்ற பாதிப்பு ஏற்படும்போதும், பூச்சி மற்றும் நோயினால் பயிருக்கு சேதம் ஏற்படும் பட்சத்திலும் இழப்பீடு கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் ஆலங்குடி, ஆவூர், வலங்கைமான், திருக்கண்ணமங்கை, திருவீழிமிழலை, குடவாசல், அகரத்திருமாளம், நன்னிலம், பேரளம், கோட்டூர், பாலையூர், தலையாமங்கலம், மன்னார்குடி, குளிக்கரை, வடபாதிமங்கலம், கூத்தாநல்லு£ர், வடுவூர், நீடாமங்கலம் பிர்க்காவில் பயிர் செய்துள்ள நெல் தரிசு பருத்தி பயிரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

கடன் பெற்ற பெரிய, சிறு மற்றும் குறு விவசாயிகளும், கடன் பெறாத பெரிய விவசாயிகளும் ஒரு ஏக்கருக்கு ரூ.4,149-க்கு இன்சூரன்ஸ் செய்ய, அரசு வழங்கும் 50 சத மானியத்தொகை நீங்கலாக பிரிமீய தொகை ரூ.187 செலுத்த வேண்டும். கடன் பெறாத சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.4,149-க்கு இன்சூரன்ஸ் செய்ய, அரசு வழங்கும் 55 சத மானியத்தொகை நீங்கலாக பிரிமீய தொகை ரூ.168 செலுத்த வேண்டும். கூடுதலாக ஏக்கருக்கு ரூ.6,223-க்கு இன்சூரன்ஸ் செய்ய விரும்பும் கடன் பெறாத விவசாயிகள், கூடுதல் பிரிமியமாக ரூ.560 தங்கள் விருப்பத்தின் பேரில் செலுத்திடலாம். 

15-ந்தேதி கடைசி நாள்

பயிர்கடன் பெறாத விவசாயிகள் சிட்டா, அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்று முன்மொழிவு படிவத்துடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ அல்லது சேவை பகுதி வணிக வங்கிகளிலோ தங்களின் பிரிமீய தொகையை செலுத்தலாம். முன்மொழிவு படிவங்களை அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது வணிக வங்கிகளிலோ பெற்று கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகளுக்கு வருகிற 15-ந்தேதி பிரிமீயம் செலுத்த கடைசி நாள் என்பதால் விவசாயிகள் உடனே பயிர் காப்பீடு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Source  : Dailythanthi

No comments:

Post a Comment