Sunday, August 23, 2015

விவசாயிகளுக்கு தேவையான உரம் கூட்டுறவு வங்கிகளில் இருப்பு உள்ளது: கலெக்டர் பிரபாகர் தகவல்



ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் கூட்டுறவு வங்கிகளில் இருப்பு உள்ளதாக மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டத்தில் தற்போது காலிங்கராயன், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பாசன பகுதிகளில் பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மூலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பயிர்சாகுபடி செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரம் 3 ஆயிரத்து 500 டன்னும், டி..பி. உரம் 2 ஆயிரம் டன்னும், பொட்டாஷ் உரம் 2 ஆயிரத்து 500 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 3 ஆயிரத்து 200 டன்னும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறியதாவது:-

விவசாயிகள் பயிர்களுக்கு அடி உரம் மற்றும் மேல் உரம் இடுவதற்கு தேவையான உரங்களை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ அல்லது வேளாண் துறை மூலம் உர உரிமம் பெற்ற தனியார் சில்லரை விற்பனை நிலைங்களிலோ வாங்கி உபயோகிக்கலாம். ஆர்கானிக் உரம் மற்றும் பயோ உரங்கள் என்ற பெயரில் உரிய முகாந்திரம் இன்றி விவசாயிகளின் தோட்டத்திற்கே நேரில் வந்து ரசீது இல்லாமல் வழங்கும் உரங்களை விவசாயிகள் வாங்கி ஏமாற வேண்டாம். அவ்வாறு தோட்டத்துக்கு நேரில் வந்து விற்பனை செய்தால் உடனே அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்துக்கு விவசாயிகள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

உரக்கட்டுப்பாடு ஆணைப்படி சில்லரை உர விற்பனையாளர்கள், விவசாயிகளுக்கு உரங்களை அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்யவேண்டும். விற்பனை செய்யும் போது தவறாது பட்டியல்களை வழங்கிடவும், பட்டியலில் விவசாயியின் கையெழுத்தை பெறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். உரக்கட்டுப்பாட்டு ஆணையின் விதிகளை மீறும் மொத்த மற்றும் சில்லரை உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment