Thursday, August 27, 2015

கொச்சைப்படுத்த வேண்டாம்


விவசாயிகள் தற்கொலை செய்வதற்கான காரணங்களில் காதல் தோல்வி, வரதட்சிணைக் கொடுமை, குழந்தையின்மை ஆகியவையும் அடங்கும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் நாடாளுமன்றத்தில் அண்மையில் ஒரு கேள்விக்குப் பதிலளித்து கூறிய கருத்துகள் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

 ஏற்கெனவே, விவசாயிகளின் தற்கொலையைக் குறைத்துக் காட்டுவதற்காகத் தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி.) விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் எனப் பிரித்துக் காட்டி தவறான தகவல் தந்துள்ளது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 2014-ஆம் ஆண்டில் 5,650 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், இது அதற்கு முந்தைய ஆண்டில் (11,744 பேர்) தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையைவிட குறைவானதாகும் என்று என்.சி.ஆர்.பி. அறிக்கை வெளியிட்டுள்ளது.
 2014-இல் 5,650 விவசாயிகளும், 6,710 விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படிப் பிரித்துக் காட்டுவதன் மூலம், புள்ளிவிவரங்களை என்.சி.ஆர்.பி. திரித்துக் கூறுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த இரண்டையும் கூட்டினால் 12,360 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதும், விவசாயிகளின் தற்கொலை குறையவில்லை என்பதும் தெரியவரும்.
 இந்த எண் விளையாட்டின் கூச்சல், குழப்பங்களுக்கு இடையே விவசாயிகளின் உண்மையான பிரச்னை மீது கவனம் திருப்பப்படவே இல்லை. உண்மையான அளவீடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்தோமானால், விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கியிருப்பது தெரியவரும். அதிலிருந்து அவர்களை மீட்பது என்பதை இப்போதாவது சிந்திக்க வேண்டும். தற்கொலை செய்து கொள்ளாத விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பது போன்று, தற்கொலையை அளவீடாக வைத்து பிரச்னையை எடைபோடக் கூடாது.
 விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவது, அவர்களின் தற்கொலைக்குப் புதுமையான, விந்தையான காரணங்களை முன்வைப்பது ஆகியன எந்த வகையிலும் பிரச்னைக்குத் தீர்வு காண உதவாது. மாறாக, இதுபோன்ற செயல்கள், இறப்புக்குப் பின்னரும்கூட அவர்களை அவமானப்படுத்துவதாகவே கருதப்படும்.
 இந்தியாவில் விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதற்கு அரசின் சில புள்ளிவிவரங்களே சாட்சி.
 தேசிய மாதிரி ஆய்வு (70-வது சுற்று) திரட்டியுள்ள தகவலின்படி, இந்தியாவில் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 9.02 கோடி. கிராமப்புற குடும்பங்களில் இது 57.8 சதவீதமாகும். மொத்த விவசாயிகளில் 85 சதவீதம் பேர் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயக் குடும்பத்தினர்தான்.
 இந்தியாவில் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் சிறு விவசாயிகள்தான். விவசாயத்தைத் தவிர, இவர்களுக்கு வேறு வேலைவாய்ப்பு இல்லாததால் ஒரு தலைமுறை முடிந்து அடுத்த தலைமுறை உருவாகும்போது நிலத்தின் சாகுபடி பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால், அவர்களது வருமானம் குறைந்து, இறுதியில் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடுகிறது.
 ஒரு ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயிகள், அதாவது 70 சதவீத விவசாயிகளின் வருமானம் அவர்களின் செலவைவிட குறைவாகவே உள்ளது. 2013 ஜனவரி முதல் டிசம்பர் வரையில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வின்படி, ஒரு ஏக்கர் முதல் இரண்டரை ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயியின் மாத செலவினம் ரூ.6,020-ஆக உள்ளது. ஆனால், அவரது மாத வருமானமோ ரூ.5,247தான். அதாவது, அவரது மாதாந்திர பட்ஜெட்டில் ரூ.773 துண்டு விழுகிறது.
 ஓர் ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்போருக்குப் பற்றாக்குறை ரூ.1,249-ஆக உள்ளது. இங்கு ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விவசாயிகள் வருமானம் என்பது சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமல்ல, கூலி, கால்நடை வளர்ப்பு, விவசாயம் சாராத இனங்கள் மூலம் கிடைக்கும் வருமானமும் இதில் அடங்கும். 
 இரண்டரை ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி மூலம் கிடைப்பது அவர்களின் மொத்த வருமானத்தில் 23.5 சதவீதம்தான். ஒரு ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளவர்களுக்கு சாகுபடி மூலம் கிடைக்கும் வருமானம் 16.5 சதவீதம்தான்.
 விவசாயக் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் ரூ.2,115தான். இதில் விவசாயம் அல்லாத இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் ரூ.900-மும் அடக்கம் என்று அர்ஜுன் சென்குப்தா குழு அறிக்கை தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்குப் பயிர் சாகுபடிக்கு ஏற்ப விலை கிடைப்பதில்லை என்று விவசாயத்துக்கான செலவு, விலை நிர்ணயக் குழு தெரிவிக்கிறது. கிராமப் புறத்தினரில் 75 சதவீதம் பேர் மாதம் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவாகவே வருமானம் ஈட்டுவதாக 2011-இல் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதார, ஜாதி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
 விவசாயிகள் சாகுபடி தவிர, வேறு பணிகளில் ஈடுபடாவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். 44 சதவீத விவசாயக் குடும்பத்தினர் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை வைத்திருப்பதாக தேசிய மாதிரி ஆய்வு கூறுகிறது.
 விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தங்களின் செலவுக்கு ஈடாக இல்லை என்பதால் 52 சதவீத விவசாயக் குடும்பத்தினர் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறார்கள். சராசரியாக இவர்களின் கடன் அளவு ரூ.47 ஆயிரமாக உள்ளது என்று தேசிய மாதிரி ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
 52 சதவீதம் பேர் அதிகக் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்றால், எஞ்சிய 48 சதவீதம் பேருக்கு கடனே கிடைப்பதில்லை. விவசாயிகள் பெறும் கடனில் 60 சதவீதம் மட்டுமே அரசு (2.1%), கூட்டுறவு சங்கங்கள் (14.8%), வங்கிகள் (42.9%) மூலம் பெறப்படுகின்றன. மீதம் 40 சதவீதம் கடன், தொழில்முறையில் கடன் வழங்குபவர்கள் (25.8%), வர்த்தகர்கள் (2.9%), உறவினர்கள், நண்பர்கள் (9%), வேலைவாய்ப்பு வழங்குவோர் (0.8%), மற்றவர்களிடமும் (1.5%) பெறப்படுகிறது. 
 கூட்டுறவுச் சட்டம் (1904) இயற்றப்பட்டு 110 ஆண்டுகளுக்கு மேலாகியும், விவசாயிகளுக்கு இன்றளவும் கூட்டுறவுகள் மூலம் போதுமான கடன் கிடைப்பது இல்லை என்பதையே இவை உணர்த்துகின்றன.
 நம் நாட்டில் சிறு விவசாயிகள்தான் அதிகம். ஆனால், கூட்டுறவுச் சங்கங்களில் பெரு விவசாயிகளுக்கு கிடைக்கும் ஆதரவு இவர்களுக்குக் கிடைப்பதில்லை. 10 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களில் 78.9 சதவீதம் பேர் கூட்டுறவு வங்கிகள், இதர வங்கிகளில் எளிதில் கடனுதவி பெற முடிகிறது. ஆனால், 0.01 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் உள்ளவர்களில் 14.9 சதவீதம் பேரே இதுபோன்று கடனுதவி பெறுகின்றனர்.
 விவசாயிகளுக்குக் கடனுதவி சரிவரக் கிடைப்பதில்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மற்ற விஷயங்களிலும்கூட ஆதரவு கிடைப்பதில்லை. பெரும்பாலான விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை என்றால் என்ன என்று தெரிவதில்லை. 
 உதாரணமாக, நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளில் 32.2 சதவீதம் பேருக்குத்தான் குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி தெரிந்திருக்கிறது. இவர்களில் 25.1 சதவீதம் பேருக்குத்தான் நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றி தெரிந்திருக்கிறது. இவர்களில் 13.5 சதவீதம் பேர்தான் தங்களிடம் உள்ள நெல்லை கொள்முதல் நிலையத்துக்கு விற்பனை செய்கிறார்கள் என்கிறது தேசிய மாதிரி ஆய்வு அறிக்கை.
 இதேபோல, பெரும்பாலான விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதில்லை. 95.2 சதவீத நெல் சாகுபடி விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதில்லை. ஒட்டுமொத்தமாக 20 சதவீதத்துக்கும் குறைவான விவசாயிகள்தான் பயிர்க் காப்பீடு செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 பொதுவாக, பயிர்க் காப்பீடு பற்றி பெரும்பாலான விவசாயிகளுக்கு சரிவர தெரிவதில்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், பயிர்க் காப்பீடு பிரீமியம் அதிகம் என்பதால் அதனைக் கூடுதல் சுமையாகக் கருதி விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்யாமல் விட்டு விடுகின்றனர் என்பதுதான் உண்மை.
 பெரும்பாலான விவசாயிகளுக்குக் குறைந்த செலவில் சாகுபடி செய்யும் வழிமுறைகள் பற்றி தெரிவதில்லை. அவர்களுக்கு வழிகாட்ட யாரும் முன்வருவதில்லை. இதனால், விவசாயிகள் சில சமயங்களில் சாகுபடியைத் தொடராமல் கைவிட்டு விடும் நிலை உருவாகிறது. வேறு வாய்ப்பு கிடைத்தால், விவசாயத்தைக் கைவிட 75 சதவீதம் பேர் தயாராக இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. 
 2001-ஆம் ஆண்டில் 3.8 கோடி பேர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அடுத்த பத்தாண்டுகளில் 90 லட்சம் பேர் விவசாயத்தைக் கைவிட்டுவிட்டனர் என்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
 இதுபோன்ற ஆழமான காரணங்கள் குறித்து கவனம் செலுத்தாமல், காதல் தோல்வி, குழந்தையின்மை ஆகியவையும் விவசாயிகளின் தற்கொலைக்குக் காரணங்களாக கற்பிக்கப்படுகின்றன. விவசாயக் கூலிகளாகும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள். அவர்கள் தற்கொலை செய்து கொண்டாலும், அவர்களை விவசாயிகளாக கருதாத அவலம் நீடிக்கிறது.
 விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதற்கு அதில் அதிக வருமானம் கிடைக்கிறது என்பதால் அல்ல. அவர்களுக்கு வேறு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் விவசாயத்தைக் "காதலிக்கும்' நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்தக் "காதல்' தோல்வியுறும்போது தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வருகிறார்கள். 
 இதேபோல, அரசின் "ஆண்மையற்ற' விவசாயக் கொள்கைகள் விவசாயிகளுக்கு கைகொடுக்காத நிலையில் தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள்.
 எனவே, விவசாயிகளின் தற்கொலைக்கு உண்மையான காரணத்தைப் புரிந்துகொண்டு அவர்களது பிரச்னைக்கு ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வுகாண அரசு முன்வர வேண்டும்.
  Source: 

http://www.dinamani.com/editorial_articles/2015/08/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/article2983320.ece

No comments:

Post a Comment