Tuesday, April 5, 2016

'எல் - நினோ'வால் மீன்வளம்:குறைகிறது: நாசா தகவல்


வாஷிங்டன்:'எல் - நினோ' எனப்படும், பசிபிக் பெருங்கடலில் ஏற்படும், பருவநிலை மாறுபாடால், மீன்வளம் குறைந்து வருவதாக, 'நாசா' நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பருவநிலை மாறுபாடால், பசிபிக் பெருங்கடலில், தட்பவெப்பநிலை உயர்ந்து, கடல் நீர் சூடாகிறது. இதனால், தரைப்பகுதியிலும், பருவ காலங்களிலும் ஏற்படும் பாதிப்பு, 'எல் - நினோ' என்றழைக்கப்படுகிறது.இந்த பருவநிலை மாறுபாடு, உலகெங்கும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பனிமலைகள் உருகுவது, பருவம் தவறி மழைப் பெய்வது, வறட்சி, வெள்ளம் ஏற்படுவதும் இந்த, 'எல் - நினோ'வின் தாக்கத்தால்தான்.இந்த, 'எல் - நினோ' தாக்கத்தால், தெற்கு அமெரிக்காவின் வடக்கு கடலோரப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, நாசா ஆய்வு செய்தது.சாட்டிலைட் அனுப்பும் படங்களில், இந்த கடல் பிராந்தியத்தில் உள்ள நிற மாற்றங்களை வைத்து, இந்த ஆய்வு செய்யப்பட்டது.
நீல நிறம், கடலையும், பச்சை நிறம், அக்கடலில் உள்ள மீன்களுக்கான உணவுகளையும் குறிப்பிடுகிறது. தற்போதைய ஆய்வில், இந்த பச்சை நிறம் குறைந்து வருவது தெரிய
வந்துள்ளது.

கடல் நீர் திடீரென சூடாவதால், அதில், மீன்களுக்கு உணவாகும் தாவரங்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பது குறைந்து விடுகிறது. இந்த தாவரங்கள் குறைந்து வருவதால், மீன்களுக்கு உணவு கிடைப்பது குறைந்து வருகிறது.இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, என, நாசாவின் அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது. 'எல் - நினோ'வினால், இந்த உணவு சுழற்சி முறையில், மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பருவநிலை மாறுபாடு ஆகியவற்றால்தான் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்றும், நாசாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

source : Dinamalar

No comments:

Post a Comment