Friday, April 15, 2016

ஒரே பயிர் சாகுபடி சாத்தியமில்லை!


t

சிவகங்கை மதகுபட்டி பொன்குண்டுபட்டி அருகே வனப்பகுதி உள்ளது. வனத்தையொட்டிய பகுதியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காரச்செடிகளே இருப்பதால் அப்பகுதியில் யாரும் விவசாயமும் செய்யவில்லை. ஆனால் பொன்குண்டுபட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சி.சங்கப்புலி, 69, 'கல்லையும் பொன்னாக்க முடியும்,' என்ற வைராக்கியத்துடன் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.
கையில் கோல் ஊன்றி தான் நடக்கிறார். கரடுமுரடாக இருந்த 8 ஏக்கர் காட்டுப்பகுதியை அழித்து விவசாய நிலமாக மாற்றியுள்ள சங்கப்புலி, தன் அனுபவங்களை விளக்கினார். பல அடியில் கிணறு தோண்டியும் சரியாக தண்ணீர் ஊறாததால் கிணற்றுக்குள்ளே இரு ஆழ்துளை கிணறுகளை அமைத்தேன். நிலத்தை சீர்ப்படுத்த ரூ.3 லட்சம் செலவு செய்தேன்.
நிலங்களை சிறு, சிறு பகுதிகளாக பிரித்து தக்காளி, வெங்காயம், கடலை, தர்பூசணி, மிளகாய், கீரை வகைகள், கொத்தவரை, நெல் என 4 ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். மற்ற இடங்களில் தேக்கு, யூகலிப்டஸ், சவுக்கு போன்ற நீண்டகால பலன் தரக்கூடிய மரங்கள் வளர்க்கிறேன். இதன்மூலம் மாதம் ரூ.40 ஆயிரம் லாபம் கிடைக்கிறது.
எட்டு ஏக்கரிலும் தக்காளி, வெங்காயம், தர்பூசணி, மிளகாய், கீரை வகைகளை உள்ளூரிலேயே விற்பனை செய்வதால் தினமும் கையில் பணம் புரளும். களையெடுப்பு, உழவு செய்ய மட்டும் கூலி ஆட்களை பயன்படுத்துவேன். ஒவ்வொரு பயிரும் குறைவான அளவே பயிரிட்டுள்ளதால் காய், பழங்களை நானே பறிக்கிறேன். தர்பூசணி போன்ற சீசன் பயிர்களையும் பயிரிடுவேன். இதன்மூலம் யார் துணையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறேன், என்றார். வாழ்த்த 95852 52220.
-இ.ஜெகன்னாதன்
சிவகங்கை.


Source : Dinamalar

No comments:

Post a Comment