Friday, April 15, 2016

மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு



ரசாயன உரத்தால் புண்ணான மண்ணை தக்கைபூண்டு வளர்ப்பதின் மூலம் பொன்னாக்கும் வித்தையை கற்றுத் தருகிறார், சிவகாசி செல்லையநாயக்கன்பட்டி பகுதி விவசாயி திருவேங்கடராமானுஜம்.
அவர் கூறியது: இப்பகுதியில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படுகிறது. மண்ணிலுள்ள தழைச்சத்தினை மக்காச்சோளம் அளவுக்கு அதிகமாக உறிஞ்சி எடுப்பதால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. அடுத்து பயிர் செய்யும் போது விவசாயம் பொலிவிழந்து வருவாய் கிடைப்பதில்லை.
இதற்கு பயந்தே பலர் மக்காச்சோளம் பயிர்செய்த பின் 3 அல்லது 6 மாதம் நிலத்தை வெறுமென விட்டு விடுவார்கள். அந்நேரத்தில் நிலம் பயனற்றே கிடக்கும். மக்காச்சோளம் அறுவடை செய்த பின் அந்நிலத்தில் கழிவுகளை அகற்றாமல் தக்கைபூண்டு செடி விதைகளை துாவவேண்டும். மூன்று வாரத்திற்குள் இச்செடி 5 அடி வரை வளர்ந்து நிலத்தை காடு போல் மாற்றிவிடுகிறது. இதை கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுக்கலாம். ஒரு மாதத்திற்கு பின் செடியை அப்படியே உழுது மண்ணிற்கு அடிஉரமாக மாற்றிவிடலாம். அதன்பின் எந்த பயிரை நடவு செய்தாலும் விவசாயம் பொய்க்காது. மண்வளம் பெற்று விவசாயம் செழிக்க ஆரம்பிக்கும்.
வேளாண்துறை அதிகாரிகளின் அறிவுரைபடி தக்கை பூண்டு செடியை பயிரிட்டேன். இச்செடி நிலத்திற்கு வேண்டிய சத்துக்களை எடுத்து கொடுக்கிறது. உரமாகவும் பயன்படுகிறது. 
இதனால் மாற்று விவசாயத்திற்கு உரமிடும் செலவும் குறைகிறது. இது இயற்கை முறையில் நிலத்தை வளமாக்கும் எளியவழி என்றார். தொடர்புக்கு 96556 63232.
எஸ்.சுகந்தன், விருதுநகர்

source : Dinamalar

No comments:

Post a Comment