Friday, April 1, 2016

தேக்கடியில் நாளை மலர்க் கண்காட்சி தொடக்கம்: 50 ஆயிரம் மலர்கள் இடம்பெறுகின்றன


தேக்கடியில் சனிக்கிழமை தொடங்கும் 10}ஆவது மலர்க் கண்காட்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்கள் இடம்பெறுகின்றன.
  தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி ஊராட்சி நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் ஆகியன இணைந்து நடத்தும் இந்த மலர்க் கண்காட்சி, தேக்கடி கல்லறைக்கல் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி, ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
  இதில், பார்வையாளர்களைக் கவரும் வகையில், ஆயிரக்கணக்கான வண்ணப் பூக்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறைத் தோட்டம் அமைக்கப்படுகின்றன. 
  மேலும் இதில், வேளாண் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்காரப் போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டரங்கம், மீன் கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் நடைபெறுகின்றன.  
 இது குறித்து, கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தாமஸ் கூறியது: உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர்ச் செடிகளும், மூலிகைச் செடிகளும் இதில் அறிமுகப்படுத்துகிறோம். மேலும், பண்பாடு, கலாசாரத்தை வெளிப்படுத்தும் பழங்குடி மக்களின் கலைநிகழ்ச்சி, மழைநீர் சேமிப்பு, பிளாஸ்டிக் மறுசுழற்சி, மின்சார பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகள், பெண்களுக்கான கைத்தொழில் ஆய்வரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
  மண்ணையும், மனிதனையும் காப்பாற்றும் இயற்கையையும், இயற்கை நவதானியங்களின் முக்கியத்துவத்தையும் குறிப்பிடும் வகையில், இந்த கண்காட்சி இருக்கும். இதில், இரு மாநில மக்களின் பங்களிப்பு இருக்கும்.
 இரு மாநிலத்தவரும் ஒற்றுமையாக இருப்பதை உணர்த்தும் வகையில் இந்த விழா அமையும் என்றார்.

source :dinamani

No comments:

Post a Comment