Tuesday, July 19, 2016

ஈரல் காக்கும் பாகல்



பார்த்ததேது பார்த்திடில் பார்வையூ டழிந்திடும்
கூத்தாய் இருப்பிரேல் குறிப்பில் அச்-சிவம்அதாம்
பார்த்தபார்த்த போதெல்லாம் பார்வையும் இகந்துநீர்
பூத்தபூத்த காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே


பாகல் என்றவுடன் நமது நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான். தற்காலத்தில் சர்க்கரை குறைப்பாட்டால் துன்பப்படுவோர்கள் பச்சையாக அரைத்து முகம் சுளிக்க குடிக்க உதவும் பாகற்காய் நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் ஒன்றானது என்பதை அறிந்தவர்கள் ஒருசிலரே.

காயை சமையல் செய்து வற்றலாக்கி வறுத்து உணவுடன் சாப்பிடுவதும் நமது வழக்கம்

சுட்டிலைகளை கொண்ட கொடி வகையை சேர்ந்தது பாகல். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்துடனும், காய்கள் நீண்டும் உருண்டையாகவும் சொரசொரப்பாகவும் அமைந்திருக்கும். பார்ப்பதற்கு அதன் மேல் முட்கள் அமைந்திருப்பது போல் இருக்கும். நிலப்பாகல், மிதிப்பாகல், நரிப்பாகல், நாய்ப்பாகல், கொம்புப்பாகல், வேலிப்பாகல் காட்டுப்பாகல் என பலவகையுண்டு. வேலிப்பாகல், நரிப்பாகல், நாய்ப்பாகல் இம்மூன்றும் குத்துகாடுகளிலும் வேலிகளிலும் படர்ந்து வளரும்.

இவைகளின் காய் சிறியதாகவும் அதிக கைப்புள்ளதாகவும் இருக்கும். நிலப்பாகல், மிதிப்பாகல் இவ்விரண்டும் மிகப்பெரிதும் மிகச்சிறிதுமில்லாமல் நடுத்தரமாய் தரையில் படர்ந்து வளரும். காய்கள் ஏராளமாய் காய்க்கும். இந்த இனங்களை சமையல் செய்து உண்பது வழக்கமாக உள்ளது. பொதுவாக பாகல் முக்குற்றங்களால் ஏற்படும் பெருக்கை அடக்கும். கழிச்சல் உண்டாகும் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியாக்கும். ஈரல்நோய், வாதநோய், உள்ளவர்கள் பழத்தை சமைத்து சாப்பிட தீரும். முழுப்பயனும் பெறுவதற்கு மற்ற பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிடவேண்டும். இதனால் களைப்பு நீங்கி ஆயாசமும் தீரும்.

சிலருக்கு மாலை நேரம் சூரியன் மறைந்தவுடன் பார்வை மங்கி எதுவும் தெரியாது. மீண்டும் காலையில் சூரியன் உதயம் ஏற்பட்டவுடன் தான் பார்வை தெரியும். இதை மாலைக்கண் நோய் என்பார்கள். இவர்கள் பாகல் இலைச்சாற்றுடன் சிறிது அளவு மிளகை சேர்தரைத்துக் கண்ணைச்சுற்றி பற்றிட மாலைக்கண் குறைபாடு படிப்படியாக நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் இலைச்சாற்றை 30மிலி அளவில் குடித்துவர வயிற்றுபூச்சி கழிந்து வெளியேறும்.

பாகல் இலைச்சாறு, ஆனைபுளிச்சாறு, பழுத்த வெற்றிலைச்சாறு, நாவல்பட்டைச்சாறு ஆகியவற்றை ஒரெடையாக எடுத்து அதில் சிறிதளவு வசம்பு உரைத்து 7நாட்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் கல்லீரல், மண்ணீரல் கட்டிகள் கரைந்து போகும். பாகல் வற்றலை வறுத்து சாப்பிட மூலம் காமாலை நீங்கும். இதை உண்ணும் காலத்தில் அசைவ உணவை முற்றிலும் விலக்கவேண்டும்.

இலைச்சாற்றை வாரம் ஒருமுறை 100மிலி குடித்து வந்தால் சிறுநீர் சர்க்கரையின் அளவு குறையும். சிலருக்கு உள்ளங்கால்களில் காலையில் எப்பொழுதும் எரிச்சல் இருக்கும். இதை செய்வினை கோளாறு என நினைத்து மாந்தீரிகத்தை நாடுவார்கள். இவர்கள் பாகல் இலைச்சாற்றை பிழிந்து இரவு படுக்கப்போகும்போது உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் நீங்கும். 
Source : Dinakaran

No comments:

Post a Comment