Tuesday, July 19, 2016

இலந்தை



நன்றி குங்குமம் டாக்டர்

சித்த மருத்துவர் சக்தி சுப்பிரமணியன்


நம் பால்ய காலத்தை இனிமையாக்கிய எண்ணற்ற விஷயங்களில் இலந்தையும் ஒன்று. சுவையான பழம், எளிதாகக்  கிடைக்கக்கூடியது, விலை குறைந்தது என்று அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் உற்சாகத்தை வழங்கக்கூடிய  குணம் இலந்தைக்கு உண்டு என்பது அவற்றில் சிறப்பான ஓர் அம்சம்.

சுட்டெரிக்கும் இந்த வெயில் காலத்துக்கு ஏற்ற, உடலுக்குக் குளிர்ச்சி தரும் பழம் இலந்தை என்று சொன்னால் அது  மிகையில்லை. அதனால், இந்த இதழில் இலந்தையின் மகத்துவங்கள் பற்றிப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.  இலந்தைப் பழத்தைப் போலவே இலந்தை மரம், பட்டை, வேர் என அதன் சகல பகுதிகளுமே பல்வேறு மருத்துவ  குணங்களைக் கொண்டுள்ளது என்பதால் அவற்றையும் சேர்த்தே பார்ப்போம்.

இலந்தையின் தாவரவியல் பெயர் Ziziphus jujuba என்பதாகும். இந்தியாவை தாயகமாகக் கொண்டது என்பதால்  ஆங்கிலத்தில் Indian jujube என்கிறார்கள். வடமொழியில் ‘பாதர்’, ‘கோலா’ என்று அழைக்கப்படுவதுண்டு. மர வகையைச் சார்ந்த தாவரமான இலந்தை சாதாரணமாக எந்த நிலத்திலும், வறண்ட சூழலிலும் வளரக் கூடியது.  முட்கள் நிறைந்த இலந்தை மரம் 15 அடி உயரத்துக்கு மேலும் வளரும்.

நரி இலந்தை, கொடி இலந்தை, சிற்றிலந்தை, நில இலந்தை, காட்டு இலந்தை, ஆற்றிலந்தை, சுரை இலந்தை, காய்  இலந்தை, பாதிரி இலந்தை, பேரிலந்தை, புளி இலந்தை, சீமை இலந்தை, வரி இலந்தை என இலந்தையில் பல்வேறு  வகைகள் உள்ளன. இவற்றில் ஒவ்வோர் இலந்தையும் தனித்தன்மை மிக்க சுவை கொண்டது. உதாரணத்துக்கு, நாட்டு  இலந்தையின் பழம் இனிப்பும் புளிப்பும் கலந்ததாக இருக்கும். காட்டு இலந்தையின் பழமோ புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு  ஆகியன கலந்ததாக இருக்கும்.

இலந்தையின் மருத்துவ குணங்கள்


இலந்தைப் பழம் குளிர்ச்சி தரும் தன்மை உடையது என்று முன்னுரையிலேயே பார்த்தோம். அதேபோல், வயிற்றுக்  கோளாறுகளைப் போக்கவும், ரத்தத்துக்கு உறையும் தன்மையை வழங்கவும், வலி நீக்கியாகவும் விளங்கும் திறன்  கொண்டது இலந்தை. நன்கு பழுத்த இலந்தை மலச்சிக்கலைப் போக்கக் கூடியதாகவும் விளங்குகிறது.

மேலும் நெஞ்சகச் சளியைக் கரைத்து வெளித் தள்ளக் கூடியதாகவும், சத்தான உணவாக உரம் தருவதாகவும்,  இருமலுக்கு மருந்தாகவும், ஒவ்வாமைக்கு எதிரானதாகவும், ஈரலுக்கு பலம் தரவல்லதாகவும் அமைகிறது. இலந்தைப் பழத்தின் விதைகள் வயிற்றுப் போக்கைத் தணிக்கக் கூடியது, வறட்டு இருமலைப் போக்கக் கூடியது, சரும  நோய்களைத் துரத்தக் கூடியது, லேசான மயக்கமூட்டியாக செயல்படுவது, வாந்தியைத் தடுக்கக் கூடியது, தூக்கமின்மையைப் போக்கக் கூடியது.

இலந்தையின் மரப்பட்டை பேதியை நிறுத்தக் கூடியது. இலந்தையின் வேர்ப்பட்டைச் சாறு வயிற்றுப் போக்கை தடுக்கக்  கூடியது, மேற்பூச்சாக மூட்டு வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் கரைக்கவும், வலியைக் குறைக்கவும் பயன்படுகிறது. இலந்தையின் இலை மற்றும் துளிர்களை பசையாக்கி கட்டிகள், கொப்புளங்கள், வேர் ஊன்றிய கட்டிகளுக்கு  மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் விரைவில் குணமாகும்.

Source : Dinakaran

No comments:

Post a Comment