Wednesday, July 13, 2016

கற்பனை நோய்கள் போக்கும் பருத்தி

பருத்தி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது ஆடையும் படுக்கையும்தான். இன்று உலகம் முழுவதும் பருத்தி ஆடைக்கு இருக்கின்ற மதிப்பு அளவிட முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் பருத்தியும் ஒரு மூலிகை என்றால் நம்ப முடியுமா? அது தான் உண்மை. உலக வாழ்வில் தமிழர்களின் வாழ்க்கை முறை மட்டுமே இயற்கையுடன் இணைந்த வாழ்வாக அமைந்திருந்தது. உணவை மருந்தாகவும், மருந்தை உணவாகவும் உண்டு நலமுடன் வாழ்ந்தனர். 

இந்தியா இலங்கை நாடுகளில் பெருமளவு ஆடைக்காக பயிரிடப்படுகிறது. இதில் வெண்பருத்தி ஆடை, நெய்வதற்கு பயன்படுகிறது. அதன் பஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் மெத்தையில் படுத்து தூங்கினால் ஆயுள் அதிகரிக்கும். இதன் இலை பூ பஞ்சு, பட்டை, வேர், வேர்பட்டை மருத்துவ குணங்கள் உடையது. ஐந்தாய்ப்பிரிந்த இலைகள் பச்சை சிறத்தில் அமைந்திருக்கும். 

மலர்கள் மஞ்சள் நிறத்துடனும் அமைந்திருக்கும். இதில் செம்பருத்தி, கொங்கிலவும் மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகிறது.. சிவப்பு நிற மலர்கள் உடையது செம்பருத்தியாகும். ஆனால் பஞ்சு வெண்மையாகவே இருக்கும் நோய்களில் தீர்க்க முடியாத நோய்கள் என்பது கற்பனை நோய்தான். அது என்ன கற்பனை நோய்? சிலருக்கு கை வலிப்பதாக கூறி கொண்டே இருப்பார்கள். எந்த மருந்து கொடுத்தாலும் இது தீராது. 

இது மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து உண்டாகும் நோயாகும்.  இதற்கு பருத்தி வேரின் பட்டையை அரைலிட்டர் தண்ணீரில் போட்டு பாதியளவு சுண்டும் வரை காய்ச்சி வடிக்கட்டி 30மிலி அளவில் அரை மணிக்கு ஒரு முறை குடித்து வந்தால் நரம்பு கோளாறுகள் அதனால் ஏற்படும் கற்பனை நோய்கள் நீங்கும். இது செரிமாணத்தை தூண்டும். 

இலைக்கொழுந்தை நிழலில் காயவைத்து குடிநீரிட்டு கழிச்சல்களுக்கு கொடுத்தால் கழிச்சல் நிற்கும். உடல் தேறும்.  30கிராம் இலை அல்லது மொக்கை எடுத்து மசிய அரைத்து 80மிலி பசும்பாலில் கலந்து காலையில் ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் பெண்களின் வெள்ளை போகுதல் முதலிய சிறுநீரக கோளாறுகள் நீங்கும். தீராத வயிற்று கடுப்பு ஏற்பட்டால் இலைச்சாறு 30மிலி எடுத்து 150 பசும்பாலில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும். 

36 கிராம் இச்சாற்றை பசும்பாலில் கலந்து  குடித்தால் சீதக்கழிச்சல் நீங்கும். இலையை அரைத்து பற்று போட்டால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும். தேள் கொட்டியவர்கள் அதன் கடுப்பு தாங்க முடியாமல் துன்பப்படுவார்கள். இவர்களுக்கு இலையுடன் அதே அளவு கடுகு சேர்த்து அரைத்து பற்று போட தேள்கடி கடுப்பு குறைந்து நலம் பெறுவீர்கள்.

பூ அல்லது பருத்தி விதைகளை அரைத்து பற்றுபோட தீக்காயங்கள் ஆறும். பஞ்சை கருக்கிப்பொடித்து புரையோடிய புண்களுக்கு தடவ விரைந்து ஆறும். விதைகளை தோள் நீக்கி பொடித்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை 200மிலி பசும்பாலில் கலந்து குடித்து வர நரம்பு மண்டலம் வலுப்பெறும்.

100கிராம் விதையை சிதைத்து எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 500மில்லியாக காய்ச்சி வடித்து மூன்று வேளை குடித்து வர வயிற்றுகடுப்பு, முறைக்காய்ச்சல் நீங்கும். பருத்தி  விதையின் மூலம் எடுக்கப்பட்ட பருத்தி விதை எண்ணெயை தடவினால் அரிப்பு, தோலில் தோன்றும் புள்ளிகள் அக்கிபுண், சொறி நீங்கும். பூவை தண்ணீர் விட்டு அதனுடன் அளவாக சர்க்கரை சேர்த்து பாகு பதமாக காய்ச்சி பாட்டிலில் வைத்துக்கொண்டு நாள்தோறும் காலை, மாலை 30மிலி குடித்து வந்தால் நரம்பியல் நோய்கள், கற்பளை நோய்கள் அனைத்தும் நீங்கும். 

மேலும் சிறுநீர் நோய்கள் தணியும் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். இரண்டு பருத்தி மொக்கை பசும்பால் விட்டு அரைத்து விழுங்கினால் மேகநோய்கள் நீங்கும். இரத்த பித்த நோயும் நீங்கி நலம் உண்டாகும். இதைத்தான் 

பருத்தியிலை மொக்கிரண்டைப் பாலிலரைத் துண்ண
வருத்துகின்ற மேகமெல்லாம் மாறும் பருத்த
விரத்தபித்தத் தோடு வீரணவீக் கம்போம்
அரத்தவிதழ் மாதே யறை 


என்கின்றார் அகத்தியர் பெருமான். பருத்திதானே என்று இருந்திடாமல் அதில் உள்ள மருத்துவகுணங்களை ஆராய்ந்து நமக்களித்த நமது முன்னோர்களின் வழியில் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.  

source : Dinakaran

No comments:

Post a Comment