Monday, December 28, 2015

எண்ணெய் வித்துகளின் முளைப்புத் திறனை காக்கும் முறை

எண்ணெய் பயிர் வித்துகளின் முளைப்புத் திறனை பாதுகாக்க வேண்டும் என்றால் நன்றாக உலர வைப்பதுதான் (9 சதவீத ஈரப் பதம்) சிறந்த வழி என்று காஞ்சிபுரம் விதைப் பரிசோதனை நிலையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து விதை பரிசோதனை அலுவலர் மாயன் வெளியிட்ட அறிக்கை:
 விவசாயிகள் பயிர் அறுவடைக்குப் பின் விதைகளை வெயிலில் காயவைத்து சேமித்து வைத்து அடுத்த பருவத்தில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த முறையில் நெல், சிறுதானியங்கள், பயிர் வகைகளின் முளைப்புத் திறனை விட மணிலாவின் முளைப்புத் திறன் குறைந்து காணப்படுகிறது.
 எண்ணெய் பயிர் வித்துகளின் விதைகளை தேவைக்கு அதிகமாக வெயிலில் காய வைப்பதாலும், அதிக ஈரப்பதம் உள்ள இடத்தில் சேமித்து வைப்பதாலும் முளைப்புத் திறன் பாதிக்கப்படுகிறது. அதோடு ஈரப்பதம் அதிகரிப்பால், பூச்சிகள், பூஞ்சாண நோய் தாக்குதலால் பயிர் இழப்பு, உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படுகிறது.
 எனவே எண்ணெய் பயிர் வித்துகளை சேமித்து வைக்கும் விவசாயிகள், விதையின் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் 9 சதவீத ஈரப்பதத்துக்கு குறையாமல் பாதுகாக்கலாம். 
 இந்த நடைமுறைகளை கடைப்பிடித்து எண்ணெய் வித்துகளின் விதைகளை பாதுகாப்பதோடு அவற்றின் முளைப்புத் திறன் சரியாக உள்ளதா என்பதையும் அறிந்து விதைப்பு செய்தால் அதிக மகசூல் பெறலாம்.
 எண்ணெய் வித்துப் பயிர்களில் விதைகளின் முளைப்புத் திறனை அறிய விரும்பும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைக் குவியலில் இருந்து எள் எனில் ஒவ்வொரு விதைக் குவியலில் இருந்தும் 250 கிராமும், மணிலா விதையெனில் 500 கிராமும் எடுத்து பாலித்தீன் பைகளில் போட்டு விண்ணப்பக் கடிதத்தை இணைத்து விதைப் பரிசோதனை அலுவலர், விதைப் பரிசோதனை நிலையம், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும். 
 ஒவ்வொரு விதை மாதிரிக்கும் ரூ.30 செலுத்த வேண்டும். பரிசோதனை முடிவுகள் விவசாயிகளின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

Source : Dinamani

No comments:

Post a Comment