Tuesday, December 29, 2015

சரியான முறையில் உரமிட்டால் ஒரு தென்னை மரத்தில் ஆண்டுக்கு 200 காய்கள் மகசூல் பெறலாம் வேளாண் அதிகாரி வழிகாட்டல்

சரியான முறையில் தென்னைக்கு உரமிட்டால் ஆண்டுக்கு 200 காய்கள் வரை மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து பட்டுக்கோட்டை அடுத்த திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நெட்டை ரக தென்னைக்கான உர பரிந்துரைகள்:-நடவு செய்தது முதல் ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 0.325 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 0.5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 1.5 கிலோ, 2 வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 20 கிலோ, யூரியா 0.650 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 2.5 கிலோ, 3 வருட கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 0.975 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1.5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3.750 கிலோவும், 4 வருட கன்றுக்கு தொழு உரம் 40 கிலோ, யூரியா 1.3 கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோவும்,5 வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மரங்களுக்கு தொழுஉரம் 50 கிலோவும், யூரியா 1.3 கிலோ சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோவும் இட வேண்டும். செம்பான் சிலந்தி தாக்குதல் காணப்படும்5 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களுக்கு  2 கிலோ என்பதற்கு பதிலாக 3.5 கிலோ வரை பொட்டாஷ் சேர்த்து இடலாம். நெட்டை-  குட்டை மற்றும் குட்டை -நெட்டை வீரிய ஒட்டு ரக தென்னைக்கான உர பரிந்துரைகள் : நடவு செய்தது முதல் ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 15 கிலோ, யூரியா 0.5 கிலோ, சூப்பர் 0.375 கிலோ, பொட்டாஷ் 0.750 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 1.5 கிலோவும், 2வருட கன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 1 கிலோ, சூப்பர் 0.750 கிலோ, பொட்டாஷ் 1.5 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 2.5 கிலோவும்,3 வருட கன்றுக்கு தொழு உரம் 45 கிலோ, யூரியா 1.5 கிலோ, சூப்பர் 1.150 கிலோ, பொட்டாஷ் 2.250 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 3.750 கிலோவும், 4வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மரம் ஒன்றுக்கு தொழுஉரம் 60 கிலோ, யூரியா 2.250 கிலோ, சூப்பர் 1.5 கிலோ, பொட்டாஷ் 3 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5 கிலோ இட வேண்டும். மேற்கண்ட உர பரிந்துரை அளவினை இரு சம பங்காக பிரித்து வருடத்தில் இருமுறை இட வேண்டும். அதாவது மார்கழி, தை (டிசம்பர்- ஜனவரி) மாதங்களில் ஒருமுறையும், ஆனி, ஆடி (ஜுன் - ஜூலை) மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும்.  பேரூட்டச்சத்துக்களை கொடுக்கக் கூடிய மேற்கண்ட உரங்களை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து நுண்ணூட்டச் சத்துக்களைக் கொடுக்கக் கூடிய தென்னை நுண்சத்து உரத்தினை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் வருடத்தில் இரண்டு முறை சரிபாதியாக பிரித்து  இட வேண்டும் (அல்லது) மரம் ஒன்றுக்கு போராக்ஸ் 50 கிராம், ஜிப்ஸம் 1 கிலோ மற்றும் மெக்னீசியம் சல்பேட் 0.5 கிலோ ஆகியவற்றை கலந்து மரத்தை சுற்றி வருடத்திற்கு ஒருமுறை இட வேண்டும். இடக்கூடிய பேரூட்டம் மற்றும் நுண்ணூட்ட உரங்களை மரத்தைச் சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறிவிட்டு உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
இவ்வாறு முறையாக உரமிடும் பட்சத்தில் குரும்பை உதிர்தல், ஒல்லிக்காய், காய்களில் வெடிப்பு, நீள வடிவிலான வெற்றுக்காய்கள் ஆகிய பிரச்சனைகள் குறைந்து ஆண்டு ஒன்றுக்கு மரம் ஒன்றுக்கு சராசரியாக 150 முதல் 200 தேங்காய்கள் வரை நிச்சயம் மகசூல் எடுக்க முடியும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment