Monday, December 28, 2015

மிளகாய் சாகுபடியில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?


T
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிளகாய் பயிரிடும் விவசாயிகள் முறையான பயிர் மேலாண்மையைக் கையாள்வதன் மூலமும், பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் அதிக சாகுபடியைப் பெற முடியும்.
 மிளகாய் செடியைப் பொருத்தவரை வளரும் பருவம், பூக்கும் பருவம், காய் விடும் பருவம் என மூன்று பருவத்திலும் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றை முறையான தடுப்பு முறைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். 
 மிளகாயில் பச்சை மிளகாய், பஜ்ஜி மிளகாய், குடை மிளகாய் என்ற மூன்று வகையான மிளகாய் உள்ளது. உணவில் காரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பச்சை மிளகாய்தான் காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
 இந்த பச்சை மிளகாயை பயிர் செய்வது குறித்து காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த தோட்டக் கலைத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
 பச்சை மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிர் செய்யப்படுகிறது. மிளகாய் செடியில் நன்றாக பூ எடுக்க பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதால், பூ நன்றாக விடும். அதேபோல் துளிரும் நன்றாக வரும். நோய் எதிர்ப்புத் தன்மை அதிகம் கிடைக்கும்.
 வளர்ந்து வரும் மிளகாய் செடியில் பலவிதமான பூச்சிகள் தாக்குகின்றன. குறிப்பாக மிளகாயை இலைப்பேன், அசுஉணி, செஞ்சிலந்தி ஆகிய மூன்று வகையான பூச்சிகள் தாக்குகின்றன. இவற்றை முறையான மருந்துகள் தெளித்தும், பொறிகள் அமைத்தும் கட்டுப்படுத்தலாம்.
 இலைப்பேன்: இது, இலையில் உள்ள சாற்றை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் இலை மஞ்சள் நிறமாக மாறும். இப் பூச்சியில் தாக்குதல் காணப்பட்டால் ஒரு ஏக்கருக்கு 50 லிட்டர் தண்ணீரை தெளிப்பான் மூலம் தெளிப்பதால் இலைப்பேன் கொட்டிவிடும். அதிகம் இலைப்பேன் இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மி.லி. டைமீட்டோடேட் 30 இ.சி என்ற மருந்தை கலந்து தெளிக்க வேண்டும்.
 அசு உணி: அசு உணி என்ற பூச்சி சாறு உறிஞ்சும் தன்மை கொண்டது. செடிகளில் கருப்பாகப் படிந்திருக்கும். சர்க்கரை போன்ற திரவத்தை வெளியேற்றும். இந்த பூச்சி தாக்கினால் "மொசைக்' என்ற நோய் உருவாகும். இதனால், இலைகள் சுருங்கும். இந் நோயை தடுக்க மிளகாய் தோட்டத்தில் 5 வரிசைக்கு இடையில் இரு வரிசை மக்காச்சோளம் நட வேண்டும். 
 செஞ்சிலந்தி: இப் பூச்சி கண்ணுக்குத் தெரியாது. தொலை நோக்கியால் மட்டுமே பார்க்க முடியும். இப்பூச்சி தாக்கினால் இலை திட்டு, திட்டாக மஞ்சள் நிறமாக மாறும். இப் பூச்சி தாக்குதலால் உண்டாகும் நோயை முரணை நோய் என்பர். இந்நோய் தாக்கினால் மிளகாய் வளைவாக மாறும்.
 இப் பூச்சியைக் கட்டுப்படுத்த டைகோபால்ட் என்ற மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் இரண்டு மி.லி. வீதம் கலந்து ஒரு ஏக்கருக்கு 500 மி.லி. தெளிக்க வேண்டும். நனையும் கந்தகம் ஒரு லிட்டர் தண்ணீரில் 6 கிராம் கலந்தும் தெளிக்கலாம்.
 காய்துளைப்பான் (புரோட்டானிய புழு): இவ்வகை பூச்சி தாக்கினால் காய், தண்டு ஆகியவற்றில் புழுக்கள் துளையிடும். ஆரம்ப நிலையாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு ஒரு விளக்குப் பொறி வைத்து தாய்ப் பூச்சிகளை அழிக்கலாம். அதேபோல், ஒரு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறி வைத்தும் அழிக்கலாம். இப்பொறிகள் வைக்கும்போது கீழே தண்ணீரும், அதில் 2 சொட்டுகள் மண்ணெண்ணெயும் விட்டு வைக்க வேண்டும். டிரைக்கோ கிராமா கைலோனா என்ற ஒட்டுண்ணி அட்டைகளை ஒரு ஏக்கருக்கு 12 இடத்தில் கட்டியும் இப் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
 அதேபோல் மிளகாய் செடிக்கு அருகில் உளுந்து செடி, பாசிப் பயிறு செடி நட்டால் அதன் மூலம் நன்மை தரும் பூச்சிகள் பெருகி மிளகாய் விளைச்சல் நன்றாக இருக்கும் என்றார் அவர்.
 விவசாயிகள் மிளகாயைப் பயிரிடும்போது வேளாண் அலுவலர்களின் ஆலோசனைப்படி முறையான பயிர் மேலாண்மையை மேற்கொண்டால் அதிக மகசூலைப் பெற முடியும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment