Wednesday, December 23, 2015

நெற் பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை செய்வது எப்படி? விவசாயிகளுக்கு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த மேலாண்மை செய்வது குறித்து வேளாண் துறை சார்பில் பல்வேறு வட்டாரங்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இதுதொடர்பான பண்ணைப் பள்ளி அரிமளம் வட்டாரம், நெடுங்குடி கிராமத்தில் நடைபெற்றது. இங்கு 3ம் வகுப்பு பாடமாக நெற் பயிரில் களை எடுத்தல், நீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், குறைந்த அளவிலான நீரைக் கொண்டு அதிக விளைச்சல் பெருக்குவது என்பன உள்ளிட்ட ஒருங்கிணைந்த நெற்பயிரில் மேலாண்மை செய்வது மற்றும் அசோலா ஆகியன குறித்து விவசாயிகளுக்கு விளக்கமாகக் கூறப்பட்டதோடு மேலாண்மை குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் களை நிர்வாகம் குறித்து அரிமளம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் உதயகுமார் சிறப்புரையாற்றினார். களைகளின் வகைப்பாடு, அவற்றை கட்டுப்படுத்தும் உழவியல் முறை, இயந்திரவியல் முறை, ரசாயன முறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். அத்துடன் களைக் கொல்லியின் வகைப்பாடுகள், களை வந்தபிறகும், வருவதற்கு முன்பும் பயன்படுத்தும் ரசாயனங்கள், களையை தேர்ந்தெடுத்து, களைக் கொல்லியை வகைபடுத்தி தெளித்து, கட்டுபடுத்தும் முறைகள், களைக் கொல்லி தெளிக்கும்போது கவனிக்க வேண்டியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதையொட்டி, பல்வேறு களைக் கொல்லிகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், நெல் வயலில் காணப்படும் பல்வேறு களைகள் மற்றும் அதன் குணங்கள் விவசாயிகளுக்கு ெசயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வேளாண் அலுவலர் கருப்பையா நெற்பயிரில் நீர் மேலாண்மை பற்றி எடுத்துக்கூறினார். நெல்லுக்கு காய்ச்சலும் பாய்ச்சலுமாக இருந்து, அதன் கிளை வெடிக்கும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் நீர் மிக முக்கியம் என்பதையும் மிகவும் தெளிவாக எடுத்துக் கூறினார். கதிர் முற்றும் பருவத்தில் தண்ணீரின் தேவை குறைவு என்பதையும் விளக்கினார்.
 இதனைத் தொடர்ந்து, அரிமளம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் முகமது ஷாஜஹான் அசோலா வானத்திலுள்ள தழைச்சத்தை எவ்வாறு கிரகித்து நெற் பயிருக்கு அளிக்கிறது என்பது பற்றி எடுத்துரைத்தார். மேலும் கால்நடை மற்றும் கோழி ஆகியவற்றிற்கு தீவனமாக அசோலா பயன்படுத்தும் முறை பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். 106 நாட்களில் 48 கிலோ தழைச்சத்து வரை நெல்லுக்கு கிடைப்பதை விளக்கிக் கூறினார். அத்துடன் அசோலா வளர்க்கும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தார். பின்னர், உதவித் தொழில்நுட்ப மேலாளர் விக்னேஷ் நெற்பயிரைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய் கண்டறியும் முறை பற்றியும் வளர்ந்த பூச்சிகள் ஒவ்வொறு பூச்சியிலும் எவ்வாறு இருக்கும் என்பதையும் விவசாயிகளுக்கு விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை அட்மா விரிவாக்க சீரமைப்புத் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment