Monday, May 30, 2016

வறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க விவசாயிகள் கையாள வேண்டிய நுட்பங்கள்: வேளாண்துறை யோசனை

வறட்சி காலத்தில் மண்ணின் ஈரம் காக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பழனி வேளாண்துறை அதிகாரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
 பழனி வேளாண்துறை உதவி இயக்குநர் சுருளியப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாகுபடி செய்த பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் வைக்கோல் அல்லது தென்னை நார்க் கழிவு போன்றவைகளை நிலப் போர்வையாக இருக்குமாறு நன்கு தூவி விட்டு, சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம்முறையில் நீர் பாய்ச்சப்பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதை தடுப்பது  மட்டுமல்லாமல் களை வளர்வதையும் கட்டுப்படுத்தலாம்.
கோடையில் சாகுபடி செய்யப்பட்ட இறவை மக்காச்சோளம், பயறு வகைகளில் மேற்க்கண்டபடி மூடாக்கு போடுவதாலும், நீர் தேவை அறிந்து நீர்ப்பாய்ச்சுவதாலும், மகசூல் இழப்பைக் குறைக்கலாம்.
 மேலும் மாலை நேரங்களில் நீர் பாய்ச்சும் பணியினை செய்து நீண்ட நேரம் வரை  மண் ஈரம் காத்து வறண்ட சூழலிலிருந்து பயிரைக்  காக்கலாம்.
  மலைப்பகுதிகளில் ஆழச்சால் அகலப்பாத்தி  முறையினை  கடைபிடித்து, கோடை மழை கிடைக்கும் போது மழைநீரை வழிந்தோடச் செய்வதன் மூலமும் நிலத்தின் ஈரத்தன்மையை அதிகப்படுத்தலாம். மேலும் நீர் பாய்ச்சும் போது, மண் ஈரம் நீண்ட நேரம் காத்திட, ஒரு பாத்தி விட்டு மறு பாத்தி நீரைப் பாய்ச்சினால் மிகவும் ஏற்றதாக இருக்கும். குறைந்த நீரைக் கொண்டு மரப்பயிர்கள், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு போன்ற பயிர்களைக் காக்க சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப்பாசன முறைகளையும், இலைவழி உரம் தெளிப்பு, நீரில் கரையும் உரம் போன்றவற்றை கையாளலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து அல்லது வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி செய்தலில் உள்ள நீர் மேலாண்மையால் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்.
 வரப்புப் பயிராக ஆமணக்கு பயிரிடலாம். காலையில் வெயில் வரையிலும், மாலை வெயிலின் தாக்கம் குறைந்த நேரத்திலும் விவசாயப் பணிகளாகிய களையெடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடல் போன்ற பணிகளை மேற்கொள்வதால் விவசாயிகள் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source : Dinamani

No comments:

Post a Comment