Monday, May 30, 2016

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெல், மக்காச்சோளம் பயிர்களில் அதிக மகசூல் பெறுவது எப்படி? வேளாண் அறிவியல் மையம் விளக்கம்

அரியலூர், :  நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து ஆகிய பயிர்களில்  தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது குறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் அழகுகண்ணன் விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அரியலூர் மாவட்ட விவசாயிகள் ஜூன் மாதம் (ஆனி மாதம்) செய்ய வேண்டிய வேளாண் பணிகளை விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம்.

அரியலூர் மாவட்டத்தில் குறுவை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் முதலில் தரமான வீரிய ஒட்டு ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். ஒரு  ஏக்கருக்கு திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்ய 2 முதல் 3 கிலோ விதை போதுமானது. நெல் நடவு செய்ய 100 மீட்டர் அளவில் மேட்டுபாத்தி நாற்றங்கால் அமைக்க வேண்டும். நாற்றங்காலில் 70 சதவீதம் மண் கலவை 20 சதவீதம் நன்கு மக்கிய தொழு உரம் 10 சதவீதம் நெல் உமி மற்றும் ஒன்றரை கிலோ டை அமோனியம் பாஸ்பேட் அல்லது 2 கிலோ கலப்பு உரத்தினை பொடியாக்கி கலந்து இடவேண்டும். மேலும் இரண்டு கிலோ வீதம் அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தினை இடவேண்டும். விதை விதைப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முளைகட்டுதல் செய்ய வேண்டும். அதற்கு விதைகளை 24 மணி நேரம் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம்  வீதம் சூடோமோனஸ் என்ற அளவில் தண்ணீரில் கரைத்துக்கொண்டு  விதைகளை ஊற வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி ஊற வைத்த விதைகளை காய வைத்தல் வேண்டும். விதை முளைத்து வேர் பிரியும் போது விதைக்க வேண்டும். சூடோமோனஸ் கொண்டு விதை நேர்த்தி செய்வதன மூலம் செம்புள்ளி, குலைநோய் மற்றும் கதிர் அழுகல் நோய் வருவதை கட்டுப்படுத்தலாம்.

இதேபோன்று மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள், வயலினை மூன்று முறை நன்றாக உழுது அடியுரமாக ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், யூரியா 30 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 186 கிலோ மற்றும் 33 கிலோ பொட்டாஷ் இட வேண்டும். மேலும் அடியுரமாக அஸோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தினை ஒரு கிலோ வீதம் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். துத்தநாக சத்து குறைபாடு இருப்பின் ஏக்கருக்கு 5 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்ட உரத்தினை 10 கிலோ மணலுடன் கலந்து இடவேண்டும். தரமான வீரிய ஓட்டு ரகமான விதை, ஏக்கருக்கு 8 கிலோ போதுமானதாகும். விதைக்கும் போது பார் அமைத்து வரிசைக்கு சரிசை 2 அடி இடைவெளி விட்டு விதையினை விதைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நெல் மற்றும் மக்காச்சோளத்தில் அதிக மகசூல் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Dinakaran.

No comments:

Post a Comment