Tuesday, November 10, 2015

புதுநெல்லு புது நாத்து... நெல் சாகுபடியில் அசத்தும் விவசாயி

ஆரம்ப காலத்தில் ராமநாதபுரம் வறண்ட பூமியில் மிளகி, மோட்டா ரக நெல் மானாவரியாக பயிரிடப்பட்டது. மழை பெய்தால் ஓரளவு விளைச்சல் கை கொடுக்கும். மழை பெய்யா விட்டால் கதிரில் பால் பிடிக்காமல் நெல் சாவியாகி விடும். கால்நடைகளுக்கு தீவனம் கூட தேறாது. நெல் விவசாயம் என்பது ராமநாதபுரம் விவசாயிகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. காலப்போக்கில் நெல்லுக்கு பதில் குண்டு மிளகாய், கத்தரிக்காய் என தோட்டக்கலை சம்பந்தப்பட்ட விவசாயத்தில் விவசாயிகள் கவனம் திரும்பியது. எனினும் ஒட்டுமொத்த வருவாயை, கணக்கிட்டு கருவேல மரங்களை வளர்ப்பு மிகப்பெரிய அளவில் நடக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி கருவேல மரங்களை அழிக்கும் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் விவசாயிகள் பலர் மறந்த, கைவிட்ட பழமையான அரிய வகை நெல் ரகங்களை தேடி கண்டுபிடித்து, அவற்றை சோதனை அடிப்படையில், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஏ.புதுப்பட்டியை சேர்ந்த விவசாயி எம்.ஏ.முருகவேல்பாண்டியன் விளைவித்து நெல் விதை ரகங்களை சேகரித்து வருகிறார். ராமநாதபுரம் நெல் ரகத்தை சேர்ந்த "சின்னார்' நெல் விதை, அங்குள்ள விவசாயி ஒருவரிடம் இருப்பதை அறிந்த முருகவேல்பாண்டியன், அவரிடம் விதை நெல்லை விலைக்கு வாங்கி வந்து, தனது வயலில் 50 சென்ட்டில் பயிரிட்டார். சின்னார் நெல்லின் தண்டு வயலெட் நிறத்தில், இலைகள் கருமை நிறம் கலந்து வயலெட் நிறத்தில், பார்க்க வித்தியாசமாக இருக்கும். நெல் அரிசி வெள்ளை நிறத்தில், நீளமாக, தடிமனாக இருக்கும். சீரகச்சம்மா, கர்நாடக பொன்னி போல் சன்னமாக இருக்காது. சின்னார் ரகத்தில் சுவையும், சத்தும் அதிகம்.
முருகவேல்பாண்டியன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் சின்னார் ரகம் விவசாயி ஒருவரிடம் இருப்பதை அறிந்து, அவரிடம் 20 நாள் வளர்ந்த சின்னார் ரக நாற்றுகளை கிலோ 70 ரூபாய் கொடுத்து வாங்கினேன். கதிரில் பால் பிடிக்க 90 நாட்கள் பிடிக்கும். பின் 125வது நாளில் அறுவடை செய்யலாம். இந்த அரிய வகையை விதை நெல்லிற்காக பயிரிட்டேன். விரும்பி கேட்கும் விவசாயிகளுக்கு கொடுக்கவுள்ளேன். சர்க்கரை நோயாளிகளுக்கான "காட்டுயாணம்' எனும் நெல் விதை, கேரள பாரம்பரியத்தை சேர்ந்த "கண்டசாலி' நெல் விதை, 60 நாளில் விளையும் மாப்பிள்ளை சம்பா (நுண்ணூட்ட சத்து மிகுந்தது) ரகநெல் விதைகிடைத்துள்ளது. அவற்றை சோதனை அடிப்படையில் விளைவிக்கவுள்ளேன். அழிந்து வரும் அரிய ரக நெல் விதைகளை தேடி கண்டுபிடித்து, அவற்றிற்கு மீண்டும் உயிரூட்டி அழிவில் இருந்து காப்பாற்றுவதே என லட்சியம் என்றார். தொடர்புக்கு 99440 81821
-கா.சுப்பிரமணியன், மதுரை.


Source : Dhinamalar

No comments:

Post a Comment