Monday, November 30, 2015

தோட்டக்கலை துறை மூலம் இயற்கை விவசாயத்துக்கு மானியம்


ஊட்டி: 'தோட்டக்கலை துறை மூலம், இயற்கை வழி விவசாயத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது' என, தெரிவிக்கப்பட்டது. ஊட்டி சேரிங்கிராஸ் தோட்டக்கலை வளாகத்தில், 'இயற்கை வேளாண்மை' குறித்த கருத்தரங்கு நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் டாக்டர் ராம்சுந்தர் பேசுகையில், “தேயிலை, காய்கறி சாகுபடியில் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய, தோட்டக்கலை துறை சார்பில், மானிய விலையில் உரம், இடு பொருட்கள் வழங்கப்படுகின்றன; தேவையான தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படுகின்றன. இயற்கை வேளாண்மைக்கு மாடு வளர்ப்பு மிக அவசியம்,” என்றார்.
'உபாசி' வேளாண் அறிவியல் நிலைய தலைவர் ராமமூர்த்தி பேசுகையில்,“இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்படும் பசுந்தேயிலையை மூலப்பொருளாக கொண்டு உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாளுக்கு சர்வதேச சந்தையில் கிராக்கி அதிகம். இயற்கை வேளாண்மைக்கு, மண் வளம் மிக முக்கியம்; எனவே, விவசாயிகள் மண் வளத்தை பாதுகாக்க வேண்டும்,” என்றார்.
இதில், 'பெரஸ்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ் மெல்வின் வரவேற்றார். தலைவர் டாக்டர் பெருமாள், முதன்மை செயல் இயக்குனர் ஜோஸ்டின், விவசாய ஆராய்ச்சி மைய பேராசிரியர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Source : Dinamalar

No comments:

Post a Comment