Wednesday, November 18, 2015

சின்ன சின்ன செய்திகள்



மாடித்தோட்டம்: மாடித்தோட்ட அமைப்பில் பின் பகுதியில் சுவர்களில் துணிகளை காயவைப்பதற்காகவும் அல்லது விசேஷ காலங்களில் பந்தல் அமைப்பதற்கான இரும்பு வளையங்கள் அமைத்திருப்பார்கள். அவைகளில் உயரமான நான்கு மரத்திலான கம்புகள் அல்லது இரும்பாலான கம்பி குழாய்களை அமைத்து அதில் கம்பிகளைக் கொண்டு பின்னல்களை அமைத்து அதன்மீது படரும். காய்கறிகளான பாகல், கோவைக்காய், பீர்க்கன் போன்றவற்றை மரப்பெட்டிகளையோ அல்லது மண் தொட்டிகளையோ வைத்து அதில் செம்மண், மணல், மக்கிய உரம் ஆகியவற்றை சரிசமமாகக் கலந்து பெட்டிகளின் மேல் விளிம்பிலிருந்து கீழே மூன்று அங்குலம் இடைவெளி இருக்குமாறு நிரப்பி வளர்க்கலாம்.
மாடித்தோட்டத்தில் முக்கிய பிரச்னை மண் இறுகி போவது நாம் என்ன தான் மணலையும், செம்மண்ணையும் கலந்து, தேவையான அளவு உரம், இலைக்கு போன்றவற்றை போட்டு கலந்து எடுத்தாலும் நீர் ஊற்ற ஊற்ற மெதுவாக மண் இறுகி போகும் தன்மையை பெற்று விடும். இதில் ரோஜா போன்ற ஒட்டுச்செடிகள் தாக்குப்பிடித்து வளர்ந்து விடும். ஆனால் கீரை, காய்கறி செடிகள் வளர மிகவும் சிரமப்படுகின்றன. அதே நேரத்தில் காற்றின் வேகமும் மேலே அதிகமாக இருப்பதால் இலைகள் வேகமாக வளர்ச்சிக்கு உட்படுகின்றன.
எனவே இதனைத் தவிர்க்க மாடித்தோட்டத்தில் மிக முக்கியமாய் மணலை விட்டு விட்டு, அதற்கு பதிலாக தேங்காய் நார் தூளை அல்லது கோகோ பித் அல்லது தேங்காய் நாரிலிருந்து உதிரும் பவுடர் போன்ற பொருட்களைப் பயன்படுத்தலாம். இந்த பவுடர் வெறும் ஊடகமாக மட்டுமே பயன்படும். அதில் செடிக்கு தேவையான எந்த கனிமங்களோ சத்துக்களோ கிடைக்காது. இருப்பினும் நீரை நன்றாக வெகு நாட்களுக்கு பிடித்து வைத்துக் கொள்ளும் இந்த பவுடருடன் ஏதாவது மக்கிய தாவர கழிவு உரம் மற்றும் கொஞ்சம் செம்மண் கலந்து தென்னை நார்க்கழிவு, செம்மண், மண்புழு உரம் 2:2:1 என்ற விகிதத்தில் கலவையைத் தயார் செய்து பயன்படுத்தலாம். மொட்டை மாடியில் பரப்பிற்கேற்றவாறு பல பகுதிகளைப் பிரித்து தொட்டிகளையும் பெட்டிகளையும் சீராக வரிசையாக வைத்து பயிர் வளர்க்கலாம். தேவையான இடைவெளி கொடுத்து, எல்லா செடிகளுக்கும் சூரிய வெளிச்சம் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இயற்கை விவசாயமும், நவீன தொழில்நுட்பங்களும் வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.என்.சுவாமிநாதன் தெரிவிப்பது யாதெனில், நமது விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியிலான ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம், ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு விஞ்ஞான முறையில் நீர்பயன்பாடு ஆகியவற்றை சிபாரிசு செய்கின்றன. குறுகிக் கொண்டே வரும் நிலப்பரப்பிலிருந்து நாம் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நிலம் மட்டுமல்ல நீரும் குறைந்து கொண்டே வருகிறது.
இயற்கை உரங்களையும், கனிம ரசாயன உரங்களையும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று பார்க்கக் கூடாது. இயற்கை இடுபொருட்கள் மண்ணின் உயிரித்தன்மையை அதிகப்படுத்துகின்றன. கனிம உரங்கள் பவுதீக வேதித்தன்மையை அதிகப்படுத்துகின்றன. ஆனால் கனிம உரங்களால் நுண்ணூட்டச் சத்துக்களைக் கொடுக்க முடிவதில்லை. இதனால் மண்ணின் நுண்ணூட்டச்சத்துக்களை அதிகப்படுத்த குறைந்தளவு கனிம உரங்களோடு பயோ உரங்களையும் (இயற்கை உரங்கள்), தொழு உரத்தையும் கலந்து கொடுப்பது சிறந்த முறை. இதில் பசுந்தாள் பயிர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இதோடு நைட்ரஜன் சத்துக்களை கொடுக்கக்கூடிய பயறு வகைகளையும் சேர்க்கலாம். இப்படிக் கலந்து செய்யும் முறையே சரியான விவசாயம்.

ஏலத்தோட்டம் பராமரிப்பு: நாற்றங்காலில் செடிகளைக் கலைத்து விட வேண்டும். நோய் தாக்கிய செடிகளை நீக்கி விட வேண்டும். நாற்றழுகல் நோய் தாக்குதல் இருந்தால் 0.2 சதம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு கரைசல் மண்ணில் செடியைச் சுற்றி ஊற்ற வேண்டும் அல்லது 0.2 சதம் மான்கோசெப் அல்லது டிரைகோடெர்மா அல்லது சூடோமோனாஸ் அல்லது பேசில்லஸ் இட வேண்டும்.
தோட்டத்தில் ஆங்காங்கே இடைவெளியில் புதுசெடிகளை நட வேண்டும். நிழல் தரும் மரக்கன்றுகள் நடுவதையும் திறந்தவெளி உள்ள பகுதியில் நடவேண்டும். செடிகளைச் சுற்றி தேங்கியுள்ள தண்ணீரை வடித்து விடுவது அவசியம். பாசன சாகுபடி தோட்டங்களில் இரண்டாவது முறையாக எக்டருக்கு 41.5: 41.5:83 ஓஞ் என்.பி.கே.1 ஏக்கர் என்ற அளவிலும், மானாவாரி தோட்டங்களில் எக்டருக்கு 37.5:37.5:75 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துக்கள் 1 எக்டர் என்ற அளவில் இட வேண்டும்.
துத்தநாக குறைபாடு உள்ள தோட்டங்களில் சிங்க்சல்பேட் 250 கிராம் 100 லிட்டர் தண்ணீர் கரைத்து செடிகளின் மீது இலைகளின் மேல் தூவி கீழ்பரப்பில் படும்படி தெளிக்க வேண்டும்.
-
 டாக்டர்.கு.சௌந்தரபாண்டியன்.

No comments:

Post a Comment