மொடக்குறிச்சி: பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களில் பயிரிடபட்ட நெற்பயிர்கள் மழை நீரால் மூழ்கியுள்ளதால், வயல்களில் இருந்து தண்ணீரை உடனே வெளியேற்ற விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை இணை இயக்குனர் திருமூர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் கீழ்பவானியிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஈரோடு மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது நெற்பயிர்கள் பால் கருதுகளை தள்ளியுள்ளன. மொடக்குறிச்சி, கொடுமுடி, அரச்சலூர், அவல்பூந்துறை, வெள்ளோடு பகுதிகளில் தற்போது தான் நடவு பருவத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன் தினம் பெய்த கனமழையால் கொடுமுடிப்பகுதியில், 10 ஹெக்டேர் நெற்பயிர்கள், 8 ஹெக்டேர் கரும்பு வயல்கள், மொடக்குறிச்சி வட்டாரத்தில் எழுமாத்தூர், ஈஞ்சம்பள்ளி, துய்யம்பூந்துறை, நஞ்சைஊத்துக்குளி, சாலைப்புதூர் ஆகிய பகுதியில், 8 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் இன்னமும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கோபி அருகே மேட்டுநாசுவம்பாளையம் பகுதியில், 1.2 ஹெக்டேர் பயிர்கள் மழையால் பாதித்துள்ளது. இந்த மழை தொடர்ந்தால் பல்லாயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. விவசாயிகள் மழைக்காலத்தில் நெல் வயல்களுக்கு மருந்து, உரம், தண்ணீர் எதையும் பாய்ச்சுவதோ, தெளிப்பதோ வேண்டாம். தற்போது பெய்த மழையால் வயல்களில் இருக்கும் தண்ணீர் நான்கு, ஐந்து நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். இருப்பினும் தற்போதுள்ள சூழ்நிலைக்கு வயல்களில் இருக்கும் தண்ணீர் மடைகளை திறந்தே வைத்திருக்க வேண்டும். மழை நீடிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மழையின் வருகையை பார்த்து விவசாயிகள் முன்னெச்சரிக்கையோடு பணியில் ஈடுபடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment