Friday, November 13, 2015

பரமக்குடி நெல் சாகுபடிக்கு தகுந்த உரங்கள்: வேளாண் அதிகாரி தகவல்


பரமக்குடி வட்டத்தில் நெல் பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தரக்கூடிய உரங்கள் இடுவது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ச.கண்ணையா ஆலோசனை தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வியாழக்கிழமை கூறியது: பரமக்குடி வட்டத்தில் 12 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகள் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் குறைந்த வயதுடைய ஆடுதுறை 36 மற்றும் ஆடுதுறை 45, ஐ.ஆர்- 36, அண்ணா-4 போன்ற ரகங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளன.
 இந்த ரக நெல் பயிரானது தற்போது வளர்ச்சிப் பருவத்தில் உள்ள நிலையில் அதிக  அளவில் கதிர் தரும் தூர்கள் உருவாகிட பயிருக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தரக்கூடிய உரங்கள் இடுவது அவசியம். ஊட்டச்சத்துகள் குறையும் பட்சத்தில்  தூர்களில் கதிர்கள் உருவாகாமல் மகசூல் குறைந்துவிடும்.  மண்பரிசோதனை அடிப்படையில் உரமிடுவது நல்லது. இல்லாத பட்சத்தில்  மானாவாரி நெல் பயிருக்கு 1 ஏக்கருக்கு முதல் மேலுரமாக பயிர் முளைத்த 20-25 ஆம் நாளில் 22 கிலோ யூரியாவுடன் 8 கிலோ பொட்டாஷ் உரம் கலந்து போதிய ஈரம் உள்ள போது இடவேண்டும். இரண்டாவது மேலுரமாக அதே அளவு உரத்தை  பயிர் முளைத்த 40 முதல் 45 ஆம் நாட்களில் இடவேண்டும். இதனால் அதிகமான எண்ணிக்கையில் பூக்கள் உண்டாகி அதிக மகசூல் பெறலாம்.  
  பகுதி மானாவாரியாக இருந்தால் முதல் மற்றும் இரண்டாம் மேலுரமாக பயிர்  முளைத்த அதே நாட்களை கணக்கிட்டு 33 கிலோ யூரியாவுடன் 12 கிலோ பொட்டாஷ் கலந்து இடவேண்டும். சிபாரிசு செய்யப்படும் அளவிற்கு அதிகமாக உரங்களை இடுவதால் பூச்சி, நோய் தாக்குதல் அதிகரிப்பதுடன், மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு சுற்றுப்புற சூழல் மாசுபடுகிறது. எனவே விவசாயிகள் வேளாண்துறையினரின் ஆலோசனை பெற்று சிபாரிசு செய்யும் ரசாயன உரங்களை இட்டு சாகுபடி செலவினை குறைத்து அதிக மகசூல் பெற வேண்டும் என தெரிவித்தார்.


http://www.dinamani.com/edition_madurai/ramanathapuram/2015/11/13/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-/article3125891.ece

No comments:

Post a Comment