Wednesday, November 11, 2015

சின்ன சின்ன செய்திகள் : கம்பு சாகுபடி நுட்பங்கள்

கம்பு சாகுபடி நுட்பங்கள்: மற்ற தானியங்களை விட புரதசத்து மட்டுமல்லாது அமினோ அமிலங்களையும் அதிகம் பெற்று தர வாய்ந்ததாக விளங்குகிறது. போதிய அளவு மாவுச்சத்தும், அதிக ருசியையும் கொடுக்கக் கூடிய கொழுப்பும், வைட்டமின்களும், தாது உப்புகளும் கம்பு தானியத்தில் நிறைந்துள்ளது. இரும்புச்சத்து மற்ற தானியங்களை விட அதிகம் உள்ளது.
கோ (சியு)9, மற்றும் கம்பு வீரிய ஒட்டு (கோ.9) சிறந்த இரகங்களாகும். ஒரு எக்டர் விதைப்புக்கு 5 கிலோ விதை தேவைப்படும். ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்ஸில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக விதை நேர்த்தி செய்ய வேண்டும். அத்துடன் அசோஸ்பைரில்லம் கலந்து பின்பு விதைக்க வேண்டும். வரிசைக்கு வரிசை 45 செ.மீ. செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளியில் விதைக்க வேண்டும்.
மானாவாரியில் தொழுஉரம் 12.5 டன் தழைச்சத்து 40 கிலோ/எக்டர், மணிச்சத்து 20 கிலோ/எக்டர், சாம்பல்சத்து 0 கிலோ என்ற அளவில் அளிக்க வேண்டும். இறவைப்பயிருக்கு தொழுஉரம் 12.5 டன், தழைச்சத்து 80 கிலோ, மணிச்சத்து 40 கிலோ மற்றும் சாம்பல் சத்து 40 கிலோ/எக்டர் என்ற அளவில் இட வேண்டும். 2 முறை களை எடுக்க வேண்டும். 7-10 நாட்களுக்கு ஒருமுறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
"குருத்து ஈ' தாக்குதலைக் கட்டுப்படுத்த 5 சத வேப்பங்கொட்டைச்சாறு (அ) ஒரு சதவீதம் நீம்அசால் தெளிக்க வேண்டும். "கதிர் நாவாய்ப் பூச்சி'யைக் கட்டுப்படுத்த 25 கிலோ மாலத்தியான் 5 சத தூள், 50 சதவீதம் பூவெடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும். துருநோய் கட்டுப்படுத்த எக்டருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ (அ) மான்கோசெப் 1 கிலோ தெளிக்க வேண்டும். தேவைப்படின் 10 நாட்கள் இடைவெளியில் மற்றொரு முறை தெளிக்க வேண்டும். அடிச்சாம்பல் நோய் கட்டுப்படுத்த எக்டருக்கு 500 கிராம் மெட்டலாக்ஸில் (அ) 1000 கிராம் மான்கோசெப் தெளிக்க வேண்டும்.

அறுவடை: இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தைத் தரும் . தானியங்கள் கடினமாகும். கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். தட்டை ஒருவாரம் கழித்து வெட்டி நன்கு காயவைத்து பின் சேமித்து வைக்கவும்.

பனிவரகு கோ (பிவி)5: இந்த ரகம் மிகக் குறுகிய வயது (70 நாட்கள்), அதிக தூள்கள் (4-10) அதிக கதிர் நீளம் (35 செமீ), அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. சாகுபடிக்கு ஆடி, புரட்டாசி பட்டம் ஏற்ற பருவமாகும். செம்மண், இருமண் கலந்த நிலங்கள் உகந்தது. கோடை மழையைப் பயன்படுத்தி நிலத்தை சட்டிக் கலப்பையைக் கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும்.
விதையளவு - வரிசை விதைப்பு, எக்டருக்கு 10 கிலோ, தூவுவதற்கு எக்டருக்கு 12.5 கிலோ.
இடைவெளி - வரிசைக்கு வரிசை 22.5 செமீ, செடிக்குச் செடி 7 செமீ இருக்க வேண்டும்.
விதைப்பு - கைவிதைப்பு அல்லது விதைப்பான் (அ) கொர்ரு கருவி கொண்டு வரிசை விதைப்பு செய்யலாம். இவ்வாறு செய்வதால் அதிக பரப்பளவில் மண் ஈரம் காயும் முன்பே விதையை விதைக்க முடியும்.
ஒரு எக்டருக்கு தேவையான விதை யளவிற்கு 3 பொட்டலம் (600 கிராம்) அஸோபாஸை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். ஒரு எக்டர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழுஉரம் கடைசி உழவின்போது பரப்பி பிறகு நிலத்தை உழவேண்டும். பின்னர் எக்டருக்கு 20 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து ஆகியவற்றை விதைப்பின் போது அடியுரமாக இடவேண்டும்.
விதைத்த 15-20 ஆம் நாள் ஒருமுறை களை பறிக்கவும் அவசியம். தேவைப்பட்டால் 40 ஆம் நாள் இரண்டாவது களை எடுக்கலாம். பனிவரகு பயிரை பொதுவாக பூச்சிகளும், நோய்களும் தாக்குவதில்லை. எனவே பயிர்பாதுகாப்பு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அறுவடை
: நன்கு காய்ந்து முற்றிய கதிர்களை அறுவடை செய்து, களத்தில் காயவைத்து, அடித்து பின் தானியங்கள் பிரித்து சுத்தம் செய்ய வேண்டும்.

தினை வெண்பொங்கல்
தேவையான பொருட்கள் - தினையரிசி - 1 கப், பாசிப்பருப்பு - 1/4கப், இஞ்சி - சிறிய துண்டு, மிளகு - 1/2 தேக்கரண்டி, பெருங்காயம் - சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப, கடுகு- 1/4 தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி, நெய் -2 மேசைக் கரண்டி, வறுத்த முந்திரி-10, கறிவேப்பில்லை- சிறிது, எண்ணெய் - 2 மேசைக் கரண்டி.
செய்முறை: பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும். குக்கரில் சுத்தம் செய்த தினை அரிசி, பாசிப்பருப்பு, உப்பு, தேவையான நீர் சேர்த்து வேக விடவும். பிரஷர் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, 10 நிமிடம் கழித்து அணைக்கவும். வாணலியில் நெய் சூடாக்கி, முந்திரியை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் எண்ணெய்சேர்த்து, கடுகு, உ.பருப்பு, மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும். தகவல் : கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார், சென்னை-41.
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source : Dhinamalar

No comments:

Post a Comment