Monday, October 26, 2015

கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு


கடலோர மாவட்டங்களில் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 28-இல் தொடங்கவுள்ளது. இந்த மழையால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் அதிகம் பயன் பெறும். 
 
இந்த நிலையில், தென் மேற்கு வங்கக் கடல், அதனை ஓட்டியுள்ள இலங்கை, கன்னியாகுமரி பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி அண்மையில் உருவானது. இதனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை தீவிரம் அடைந்து வருகிறது.
 
இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய அலுவலர்கள் கூறியதாவது:
 
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும்.
 
அடுத்த 48 மணி நேரத்தில், தென் மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும். அது செவ்வாய்க்கிழமை (அக்.27) வடக்கு நோக்கி நகரும் பட்சத்தில், பலத்தக் காற்று வீசுவதோடு, கடல் கொந்தளிக்கும் சூழலும் உருவாகும் என்றனர்.
 
நாங்குநேரியில் 130 மி.மீ பதிவு: இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியது. குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் அதிகபட்சமாக 130 மி.மீட்டர் மழை பதிவானது. அடுத்தபடியாக, அந்த மாவட்டத்தில் உள்ள ஆயக்குடியில் 80 மி.மீ. மழையும், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் 70 மி.மீ. மழையும், தென்காசி, மணிமுத்தாறில் 60 மி.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை, பாபநாசம், ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் 50 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

http://www.dinamani.com/tamilnadu/2015/10/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/article3097191.ece

No comments:

Post a Comment