Friday, November 6, 2015

சம்பா நெற் பயிருக்கான தேசிய பயிர் காப்பீடு திட்டம்


 திருச்சி, : பயிர்களுக்கு இயற்கை சீற்றங்களினாலும் பூச்சி நோய்களினாலும் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடுகட்டும் வகையில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்க்கை இடர்பாடுகளாலும் பூச்சி நோய் தாக்குதலினாலும் பயிர்களின் மகசூல் பாதிக்கிறது. இத்தகைய பாதிப்பிலிருந்து விவசாயிகளை காக்க தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டம் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் சேவை வங்கிகள் மூலம் பயிர் கடன் பெற்றுள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் . கடன் பெறாத விவசாயிகளும் இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். சம்பா நெற் பயிருக்கு இத்திட்டம் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படவுள்ளது. பயிர் பாதிப்பு ஏற்படும்போது உத்தரவாத மகசூலிலிருந்து நடப்பு பயிரின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அதே விகிதப்படி நஷ்டஈடு வழங்கப்படும். உத்திரவாத மகசூலை கணக்கிட நெற்பயிருக்கு மூன்று வருட சராசரி மகசூலும் இதர பயிர்களுக்கு ஐந்து வருட சராசரி மகசூலும் எடுத்துக் கொள்ளப்படும். வட்டார அளவில் காப்பீடு செய்யப்பட்ட பயிரின் மகசூல் உத்திரவாத மகசூலின் அளவை காட்டிலும் குறைவாக இருந்தால் அந்தப் பயிரை காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் மகசூல் குறைவு விகிதப்படி இழப்பீடு அளிக்கப்படும்.
பயிர் காப்பீடு செய்வதற்கான பிரிமீயத் தொகையில் கடன் பெறாத சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதவீதமும் இதர விவசாயிகளுக்கு 50 சத மானியத்தை அரசே செலுத்தி விடுவதால் மீதமுள்ள தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். சம்பா நெற் பயிரை பொறுத்தவரையில் ஒரு ஏக்கர் பயிர் காப்பீடு செய்ய கடன் பெறாத சிறு,குறு விவசாயிகள் ரூ134-ம் இதர விவசாயிகள் ரூ149-ம் செலுத்தினால் போதுமானது. பயிர் காப்பீடு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பயிர் நடவு செய்த ஒரு மாதத்திற்குள் அல்லது  டிசம்பர் 15ம் தேதிக்குள் இதில் எது முன்னதாக உள்ளதோ அந்நாளுக்குள் உரிய பிரிமியத் தொகையுடன் சம்மந்தப்பட்ட கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் செலுத்தி இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment