Monday, September 19, 2016

கம்பு பயிரிட்டால் காசு பார்க்கலாம் வேளாண்துறை ஆலோசனை

பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது விவசாய பணிகள் துவங்கி உள்ளன. தற்போது இறவை பாசன வசதி உள்ள விவசாயிகள் கம்பு பயிரிடுவது ஏற்ற தருணமாகும். கோ 7, கோ (சியு) 9, ஜசிஎம்வி 221, ராஜ் 171, எக்ஸ் 7 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். எக்டேருக்கு 3.75 கிலோ விதை தேவைப்படும். நாற்றாங்கால் எக்டேருக்கு 7.5 சென்ட் அளவிற்கு இருக்க வேண்டும். 3*1.5 மீட்டர் அளவு கொண்ட 6 படுக்கைகள் 1 சென்டில் அமைத்து அரை மீட்டர் கால்வாய் அரை அடி ஆழத்தில் ஒவ்வொரு படுக்கையை சுற்றி அமைக்க வேண்டும். 

எக்டேருக்கு 750 கிலோ தொழுஉரம் இட வேண்டும். தேன் ஒழுகல் நோய் பாதித்த விதைகளை நீக்க 10 லிட்டர் நீரில் 1 கிலோ உப்பினை கரைத்து விதைகளை அதில் கொட்டி மிதக்கும் விதைகளை நீக்க நல்ல தண்ணீர் கொண்டு 3, 4 முறை விதைகளை கழுவி பின்பு நிழலில் உலர்த்த வேண்டும். தண்டு ஈ மற்றும் தண்டு துளைப்பான் நோய் தாக்காமல் இருக்க குளோரிபைபாஸ் 36 டபிள்யூ.எஸ்.வி அல்லது பாசலோன் 35 இசி 4 மில்லியுடன்  5 கிராம் பசை இவற்றை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைக்க வேண்டும். அடிச்சாம்பல் நோய் தாக்காமல் இருக்க மெட்டலாக்சில் 6 கிராம் உடன் 5 மில்லி தண்ணீர் கலந்து 1 கிலோ விதையுடன் கலக்க வேண்டும்.

விரல்களால் 1 சென்டிமீட்டர் ஆழத்திற்கு கோடுகள் இட்டு, 1 படுகைக்கு அரை கிலோ விதையினை தூவி மண்ணில் மூட வேண்டும். மிதைல் பாரதியான் மருந்தினை விதைத்தவுடன் தூவி எறும்புகளிலிருந்து பாதுகாக்கலாம். நாற்றுக்களை தண்டு ஈயிலிருந்து காப்பதற்கு கார்போபியூரான் 3ஜி 600 கிராம் கலந்து தூவி விட வேண்டும். 30 சென்டிமீட்டர் கால்வாய் மூலம் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். மண்ணில் நீர் உறிஞ்சிக்கொள்ளும் வரை மட்டும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். 6 மீட்டர் உள்ள பார்கள் 45 சென்டிமீட்டர் இடைவெளியில் அமைக்க வேண்டும். இடைவெளி 45*15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தியபடி உரங்கள் இட வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Source : Dinakaran

No comments:

Post a Comment