Wednesday, January 27, 2016

நெல் அறுவடையைத் தொடர்ந்து உளுந்து சாகுபடி மேற்கொண்டால் குறைந்த செலவில் அதிக வருவாய் வேளாண் துறை ஆலோசனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் நெல் அறுவடையைத் தொடர்ந்து உளுந்து சாகுபடி மேற்கொண்டால் குறைந்த செலவில் அதிக வருவாய் ஈட்டலாம் என்று வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. இதற்காக விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய நவீன தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் இணை இயக்குநர் சந்திரசேகரன், குடுமியான்மலை உழவர் பயிற்சி நிலையத் தலைவரும், வேளாண் துணை இயக்குநருமான சாந்தி, வேளாண் அலுவலர் செல்வி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் நெல் அறுவடை தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது. அறுவடைக்குப் பிறகு நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் உளுந்துச் சாகுபடி மேற்கொண்டால் அதிக அளவில் வருவாய் ஈட்டலாம். பொதுவாக நெல் சாகுபடிக்கு 1200 மி.மீ. நீர் தேவை. ஆனால், உளுந்துச் சாகுபடிக்கு 350 முதல் 400 மி.மீ. வரையிலான நீர் போதுமானது. அதாவது ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்குத் தேவையான நீரைப் பயன்படுத்தி 3 ஏக்கர் உளுந்துச் சாகுபடி செய்யலாம். உளுந்துப் பயிரின் வேர்களில் வேர்முடிச்சு உள்ளதால் அவற்றில் தழைச்சத்து உள்ளிழுக்கப்பட்டு மண்வளம் மேம்படுகிறது. சந்தையில் உளுந்தம் பருப்பு கிலோ ஒன்று 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதனால் அதிக அளவில் வருமானம் கிடைக்கிறது. உளுந்துப் பயிர் குறுகியகாலப் பயிர். அதாவது 70 நாட்களில் அறுவடை செய்துவிடலாம். உளுந்துப் பயிருக்கான சாகுபடிச் செலவும் குறைவு.

ரகங்கள்: வம்பன் 4 முதல் 7 வரையிலான உயர் விளைச்சல் தரும் ரகங்களைப் பயன்படுத்தினால் மஞ்சள் தேமல் நோய்த் தாக்குதலைத் தடுக்கலாம். ஏக்கருக்கு யூரியா 22 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 25 கிலோ, பொட்டாஷ் 16 கிலோ இடவேண்டும். இதற்கு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதை தேவை.

விதை நேர்த்தி: ஒரு கிலோ உளுந்து விதைக்கு நான்கு கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எதிர் உயிர்ப் பூஞ்சாண மருந்து கலந்து 24 மணிநேரத்திற்குள் விதைக்கவும். இத்துடன் ஒரு பொட்டலம் ரைசோபியம் (பயறு), பாஸ்போபாக்டீரியா ஆகிய நுண்ணுயிர் உரங்கள்  ஒவ்வொன்றிலும் 200 மி.லி. எடுத்து ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்கலாம்.

விதைப்பு: வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும் பயிருக்குப் பயிர் 10 செ.மீ. இடைவெளியும் இருக்குமாறு பயிர் எண்ணிக்கையைச் சீர்காத்தல் வேண்டும். ஏக்கருக்கு 2 கிலோ பயறு நுண்ணூட்டக் கலவையைத் தேவையான அளவு மணலுடன் கலந்து விதைக்கும் முன் சீராகத் தூவுதல் வேண்டும். இதனை அடியுரமாக இடுதல் கூடாது.

அறுவடை: காய்கள் 80 சதவீதம் முதிர்ச்சியடைந்தவுடன் செடிகளை அறுத்து வெயிலில் காயவைத்துக் கையினாலோ இயந்திரங்களைக் கொண்டோ மணிகளைப் பிரிக்கலாம். விதைகளை நன்கு காயவைத்து, அதாவது ஈரப்பதம் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருக்குமாறு தூய்மையான கோணிப் பைகளில் சேகரிக்க வேண்டும்.  இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.

களை மேலாண்மை

விதைத்த 3ம் நாள் 200  லிட்டர் நீரில் ஏக்கர் ஒன்றுக்கு 1.3 லிட்டர் பென்டிமெத்திலின் 30 இ.சி.  தெளித்துக் கட்டுப்படுத்தலாம். அதனைத் தொடர்ந்து விதைத்த 20ம் நாளில்  கைக்களை எடுத்தல் வேண்டும். விதைத்தவுடன் ஒருமுறையும், 3ம் நாள் உயிர்  நீராகவும் நீர் பாய்ச்சுதல் வேண்டும். பின்பு 10 நாட்கள் இடைவெளியில்  நீர்ப் பாய்ச்சுதல் வேண்டும். 2% டி.ஏ.பி. கரைசல் தெளித்தல்: ஏக்கருக்கு 4  கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் நீரில் 12 மணிநேரம் ஊறவைத்துப் பின்பு  தெளிந்த கரைசலைத் தேவையான நீருடன் கலந்து 200 லிட்டர் கரைசலாக்கிக்  கைத்தெளிப்பான் மூலம் இலைகள் நன்கு நனையுமாறு பூக்கும் சமயம் ஒருமுறையும்  15 நாட்கள் கழித்து மறுமுறையும் மாலை வேளையில் தெளித்தல் வேண்டும். இதனால்  பூக்கள் உதிர்வது தடுக்கப்பட்டு மிகுந்த காய்கள் பிடித்து பெருவிளைச்சல்  கிடைக்கிறது.

Source : Dinakaran

No comments:

Post a Comment